Saturday 24 March, 2012

மீசை




எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தது, தாய், தந்தை அரவணைப்பாக தரும் அன்பு முத்தம். குழந்தையை இரு கைகளால் அணைத்து, முழு அன்போடு, அவர்கள் கன்னத்தில் தரும் முத்தத்திற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. எந்த அளவிற்கு தன் குழந்தை மேல் அன்பு வைத்திருக்கிறான் என்று சிலநேரங்களில், இந்த முத்தங்கள் நினைக்க வைத்ததுண்டு.

ஆனால், இன்னமும் குழந்தைக்கு அன்பு முத்தமே கொடுக்க முடியாத ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்றால், நம்புங்கள்இதோ நான்தான். என் ஒரு வயது பையனுக்கு நான் முத்தம் தர முயற்சித்தாலே, அலறியடித்துக்கொண்டு ஓடுகிறான்(அதெல்லாம் பல்லு நன்றாகத்தான் விளக்குறோம்). வேறு ஒன்றுமில்லை. ஒரே காரணம். என் முகத்தில் மூக்குக்கும் வாய்க்கும் நடுவில் இருக்கும்(இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா, பின்னால இலக்கியத்துல வர வாய்ப்ப்பிருக்கு) அமேசான் காடுபோல் இருக்கும் மீசை.

அதே போல, இந்த உலகத்தில் ஒருமுறை கூட மீசையை வழிக்காத ஒரு ஜீவன் பார்த்திருக்கிறீர்களா..அதுவும் நானே(ஒன்லி டிரிம் தான்). என்னவோ தெரியவில்லை..மீசை மேல் அவ்வளவு ஆசை(இது டி.ஆர் பின்நவீனத்துவம்). அதற்கு பெரிய வரலாறு, புவீயியல் உண்டு.

காலேஜ் படிக்கும் வயதில் எல்லோருக்கும் வரும் அரும்பு மீசை கூட எனக்கு வந்ததில்லை. மதுரைப்பக்கமெல்லாம், பொதுவாக மீசையை வழிக்க மாட்டார்கள். ஷேவ் பண்ண சோம்பேறித்தனமா, என்று நினைக்ககூடும், ஆனால், மீசையை ஒருமாதிரி இன்னமும் ஆண்மையின் அடையாளமாகவே பார்க்கிறார்கள். அதனாலேயேமீசைக்கார அண்ணாச்சிகள்ஊருப்பக்கம் ரொம்ப அதிகம்.

எனக்கு மீசை மேல் ஆசை வந்ததே, அப்பாவைப் பார்த்துதான். ஒரு வேளை பென்சிலால் மீசை போட்டிருக்கிறாரோ, என்று நெடுங்காலமாக ஒரு ஐயம். அவ்வளவு நேர்த்தியாக கோடு போட்டாற் போன்று, அழகாக வரைந்தாற்போன்று இருக்கும். ஒருமுறையாவது அதை இழுத்துப் பார்த்து, என் ஐயத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில், ஒருமுறை அவர் தூங்கும்போது, அவருடைய மீசையை இழுத்தே விட்டேன். அவர் அலறிய அலறலில், கொஞ்ச காலம் மீசை மேலே உள்ள ஆசை அறவே போய்விட்டது.

மச்சி..அடிக்கடி ஷேவ் பண்ணு..”

தேங்காய் எணணை தடவு…”

என்று வளராத இடத்துக்கு பல அறிவுரைகள் தந்தனர். நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஷேவ் பண்ண ஆசைப்பட்டு, முகம் முழுவதும் ரத்தக் காயங்களோடு வந்தபோது, அம்மா அலறியே விட்டார்கள், ஏதோ அடிதடியில் கலந்துகொண்டு வந்திருக்கிறேன் என்று. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தடிமனனான மீசை இருக்கிறபோது, “எனக்கு மட்டும் ஏன்மாஎன்று அஞ்சலி பாப்பாவைக்கண்ட அக்கா மாதிரி அம்மாவிடம் அழுதிருக்கிறேன்.



சிலநேரங்களில், மீசை இல்லாமல் காலேஜ் போகவே பிடிக்காது. “அறிவாளி கேசுடாஎன்று கிட்ட சேர்க்கவே மாட்டார்கள். இதற்காகவே, ஒரு பென்சிலாலவது, கோடு வரைந்துகொள்வது என்று தீர்மானித்து, மெல்லிதாக வரைந்தும் விட்டேன். நம்ம நேரத்துக்கு பாழாப்போன மழைவந்து, நரியின் சாயாம் வெளுத்ததுபோல் ஆகிவிட்டது

ச்..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும்என்பதுபோல், மீசை பற்றிய முயற்சிகளை கைவிட்டேன். கரெக்டாக , கல்லூரி இறுதிநாட்களில் எனக்கு மீசை முளைக்க ஆரம்பித்தது. எல்லாப் பயலுகளையும் பாதையில் நிறுத்திபாருங்கடா..என் மீசையைஎன்று சொல்லலாம் போல வெறி..ஒவ்வொரு நாளும், கண்ணாடியில் முகத்திற்கு பதிலாக மீசையையே பார்த்தேன். ..
மீசையை ஆசையாக தடவிக்கொண்டேன்..”ங்கொய்யாலே, நாளைக்கே உலகம் அழியும் சொன்னால் கூட மீசையை எடுக்கக்கூடாது”: என்று மங்கம்மா சபதம் போட்டேன்..

அடிக்கடி, இரண்டு கைகளாலும், மீசையைத் தடவுவதை நான் மேனரிசமாகவே மாற்றிக்கொண்டேன். இன்னமும், ஏதாவது, புதிதாக சாதித்துவிட்டால்சாதிச்சோடோமுல்லஎன்று பெருமையான மீசையைத் தடவுவது உண்டு. அந்த அடர்த்தியான மீசையில் மேல் அவ்வளவு ஒரு மோகம்.

நண்பர்கள் கூடச் சொல்லுவார்கள்..”மச்சி..மீசை வைச்சா, பொண்ணுங்களுக்கு பிடிக்காது..எடுத்துடு..” என்று. எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டில், மீசையை ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாய் வைத்திருக்கும், ஒரே நாடு நம் நாடு தான்.
அதுவும் தமிழர்களாகியா நாம், இதை வீரத்தின் அடையாளமாய் பார்க்கிறோம், பகுத்தறிவையும் மீறி

அந்த மீசையை எடுத்து தொலைச்சா என்னவாம்..குழந்தை குத்துதுன்னு சொல்லுறான்லஎன்ற மனைவியின் குரல் அடுத்த அறையிலிருந்து கேட்டது. குளியலறையில் ஷேவ்விங்க் ரேசரோடு நான். மழிப்பதற்கு முன்பு, ஒருமுறை மீசையை பாசமாக தடவிக்கொண்டேன் ஒரு உறுப்பு போல என் கூடவே பிறந்தது. மீசையை எடுத்தால், என்னிடமிருக்கும் எதையோ உருவிக்கொண்டு போவது போல் இருக்கிறது.

சேவிங்க் ரேசரை முகத்தருகில் கொண்டு செல்ல கை நடுங்குகிறது. இதோ, 10 வருடங்களாக என் கூடவே இருந்த நண்பனை, பிய்த்து எறியப்போகிறேன்.மெல்ல, ஷேவிங்க் ரேசரை முகத்தருகில் கொண்டு சென்றவன்

அப்…..ப்…..பாஆ…..”

என்று மழலைக்குரல் கேட்டு ஷேவிங்க் ரேசரை கீழே வைத்துவிட்டு, மகனை துக்கி அன்புடன் அணைக்கிறேன்என் தோளில் சாய்ந்து கொண்டே, தன் பிஞ்சு கையை வைத்து, மெல்ல என் மீசையை இழுக்கிறான், அந்த நேரம் எனக்குள் நானே தீர்மான்ம் செய்து கொண்டேன்..

நான் மீசையை எடுக்கப்போவதில்லை..”

5 comments:

Unknown said...

எடுக்காதீங்க சார்

Ganesh said...

Nice.........
I also like my moustache :)

Anonymous said...

romba kevalamana post... u became like jackie nowadays.. (suya puranam paaduradhu)..

thoo...

RAASU said...

MEESAKKAARA NANBAA UNAKKU PAASAM ATHIKAMDAA

Manimaran said...

மீசையே நரைச்சாலும் நமக்குஅதன் மீது ஆசை நரைக்கவே கூடாது.ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க....

Post a Comment