பொதுவாக இந்தியர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்ற கருத்துண்டு. அதுவும் தென்னிந்தியர்கள், குறிப்பாக நம்மவர்களை கேட்கவே வேண்டாம்..”என்னது..பாட்டி சுட்ட வடையை காக்கா தூக்கிட்டு போயிடுச்சா” என்று ரெண்டு நாளா தூங்காமல் இருக்கும் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்படுவோம். அதை வைத்தே கல்லா கட்டும், ரியாலிட்டி ஷோக்களுக்கும், டி.ஆர்களுக்கும், விசுக்களுக்கும், விக்ரமன்களும் இங்கு அதிகம்.
பொதுவாக நான் சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டேன். மண்டை உடைந்து ரத்தம் ஒழுகிகொண்டு நின்றாலும், “அடி ஒன்னும் அவ்வளவு பலம் இல்லையே..ஒரு அனாஜினோ, நோவாஜின்னோ போட்டா சரியாக போகுது என்று விவேக் ரேஞ்சுக்கு பேசக்கூடிய ஆள்.
என் வூட்டுக்காரி எனக்கு அப்படியே எதிர்..”என்னங்க..திருமதி செல்வத்துல செல்வம் என்னம்மா அர்ச்சனாவை கொடுமைப்படுத்துறாங்க..”ன்னு கண்ணிர்விட்டால், அன்னைக்கு மதியானத்துக்கு பழைய சோறும் வெங்காயம்தான்..இல்லாட்டி எக்ஸ்பையர் ஆன, பிரட் ஆம்லெட்..
நாங்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும், ஒரே சீரியல்..இது..ஷோ, நீயா நானா தான்…சீரியலுக்கு அடுத்து மிகவும் அழவைப்பதால் என் மனைவிக்கு பிடித்தும், அதே காரணத்தாலேயே, எனக்கு பிடிக்காமலும் போன ஒரு விவாத நிகழ்ச்சி..என்னுடைய பதிவுகளில், நிறைய நான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி கிண்டல் பண்ணினாலும், விவாத நிகழ்ச்சிகளில் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்ச்சி “நீயா நானா” என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கருத்துக்களை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் தமிழ்த்தொலைக்காட்சி சானல்களில் போட்டியாக ஒரு தளமும் இல்லாதது இந்தநிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.
“அந்த சிவப்பு சட்டைக்காரனை அப்படியே போகஸ் பண்ணுப்பா..நல்லா அழுவுறான்”ற மாதிரி இருந்தாலும், கோபிநாத்(அல்லது இயக்குநர் ஆண்டனி) நிகழ்ச்சியை நடத்தி செல்லும் பாங்கு அனைவரையும் கட்டிபோட்டு விடுகிறது. விவாதத்தில் தோற்கடிக்கவே முடியாதவர் என்று ஞானியை மட்டுமே நினைத்திருந்த எனக்கு கோபிநாத்தையும் சேர்த்து கொள்ள ஆசை.
நேற்று சாதரணாமாக ஆரம்பித்த நீயா நானாவின் தலைப்பு “உறவினர்களோடு கூடி மகிழ்வது, தேவையா, தேவை இல்லாததா..”. இதில் என்ன சுவராஸ்யம் இருக்கபோகிறது என்று நினைத்த எனக்கும், என் மனைவிக்கும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் விழிநிறைய கண்ணீர். ஒரு நண்பி, “எனக்கு அப்பா இல்ல சார்..அவரை பார்க்குறதுக்கு என் அப்பா மாதிரியே இருக்கு சார்” என்றதும், என் மனைவி அழுதே விட்டாள்..கல்லாகத்தான் இருப்பேன் என்று இருந்த என்னை, மற்ற எல்லாரும் சேர்ந்து அழவைத்துவிட்டனர்..
பொதுவாக நானும் என் மனைவியும், தலைப்புகளில், இருவேறு பக்கங்களில் இருப்போம்.. “உறவினர்களோடு கூடிமகிழவேண்டும்” என்பதில் நானும், “இருக்குற வேலையில அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குது” என்று வி.டி.வி கணேஷ் மாதிரி என் மனைவியும் நீயா நானாவோடு சேர்ந்து விவாதம் செய்தோம்..
இந்த தலைப்புக்கு சரியான சீப் கெஸ்டை கூப்பிடவில்லை என்பது என் கருத்து. இயக்குநர் கருபழனியப்பனையும், மனுஷ்யபுத்திரனையும் கூப்பிட்டுருந்தால் பின்னியெடுத்திருப்பார்கள். யதார்த்தமாக பேசுகிறேன் என்று வி.டி.வி கணேஷ் சொன்ன கருத்துகளில் ஒன்றும் பலமில்லை. அதே நேரத்தில் ஓரளவுக்கு நன்றாக பேசிய, சுந்தரபாண்டியன் இயக்குநரும், முக்கியமான கருத்துக்களை முன்வைக்கவில்லை.
ஆனால் அதையெல்லாம் போக்கும் வகையில் உறவுகள் பக்கத்தில் இருந்த ராஜன் என்ற நண்பர் பேசிய விதம் அருமை..உறவினர்கள் சேர்ந்த கூட்டம், ஒரு இயக்கம்போல..அதில்தான் சாதிமுறையை அழிக்காமல் பின்பற்றுகிறார்கள்..பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒழுங்குமுறையை சரியாக பின்பற்றுகிறார்கள் என்றபோது, அதிர்ந்து போய் “ஆஹா..இன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கபோறார்யா” என்று நினைத்தபோது, அடுத்த அடுத்த அவர் சொல்லிய கருத்துக்கள் க்ளீன் சிக்சர்கள்..
“உறவினர்களிடம் பேசி புரியவைக்கமுடியாம நீயெல்லாம் எதுக்கு காதல் பண்ணுற” என்ற கருத்து நியாயமாக இருந்தாலும், அதுவரைக்கும் உசுரோட இருப்போமா என்ற பயமும் வந்தது. ஆனாலும், தெளிவாகவும், நிதானமாகவும் அவர் எடுத்து வைத்த கருத்துக்கள், அவர்தான் சீப்கெஸ்டாக் இருந்திருக்கவேண்டும் என்று, மனம் சொல்லியது..
இறுதியாக, உறவினர்கள் வேண்டும் என்ற ஏரியாவில் இருந்து, தாங்கள் கொண்டுவந்திருந்த, பரிசுப்பொருட்களை, நெகிழ்வாக, மாற்றுத் தரப்பினரிடம் கொடுத்தபோது, கலங்காத நானும் கலங்க ஆரம்பித்தேன்..”பாத்தியா..இதுக்குதான் சொந்தக்காரய்ங்க வேணும்கிறது..ஒன்னுன்னா, பத்து பேரு வந்து நிப்பாய்ங்க தெரிஞ்சுக்க” ன்னு மனைவிக்கு பெருமையுடன் சொல்ல, அவளும் அதே கலக்கத்தில் “ஆமாங்க..கண்டிப்பாக சொந்தக்காரய்ங்க வேணும்க..அடுத்த தடவை ஊருக்கு போகும்போது, ரெண்டு மாச சம்பளத்தை இப்பவே எடுத்து வைச்சிருங்கன்னு” அழுதுகொண்டே சொன்னபோது…தசவாதர கமல் போல..”சொந்தக்காரய்ங்க அம்புட்டு பேரும் வேணும்னு சொல்லலே..நெருங்குன சொந்தக்காரங்க இருந்தா நல்லா இருக்குமுன்னு சொன்னேன்” என்றேன், பர்சை தொட்டுப்பார்த்துக்கொண்டே…