
இந்த வார கண்டணம்
இந்த வார கண்டனம் நடிகர் ஜெயராமுக்கும், அவரை எதிர்த்து அவருடைய வீட்டை தாக்கியவர்களுக்கும். என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும் “தடித்த, கறுத்த தமிழச்சியான வேலைக்காரி” என்று சொன்னது தவறு. ஏன் தடித்து கறுத்து, வீட்டு வேலை செய்தால் அவ்வளவு இளக்காரமா..ஒருநாள் உங்கள் வீட்டு வேலைக்காரி விடுமுறை எடுக்கட்டும், அப்புறம் பாருங்கள் உங்கள் வீடு எவ்வளவு நாறிப் போகிறது என்று. பவுடர் போட்டு நடிக்கத் தெரிந்தால் மட்டும் பத்தாது, அடுத்தவர்களின் மனது புண்படாமல் பேசுதலோ, இருத்தலோதான் மனிதனுக்கு அடையாளம். உங்கள் நடிப்பை பார்த்து சிரித்து, மகிழ்ந்த மக்கள், உங்கள் கருத்தைக் கேட்டு சிரிப்பார்கள் என்று நினைத்தால் “சாரி ஜெயராம் சார்..” நாங்கள் மனிதர்கள்..
அடுத்த கண்டனம், ஜெயராமுக்கு கண்டனம் தெரிவிப்பதாக சொல்லி அவருடைய வீட்டை உடைத்தவர்களுக்கு. எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், அதைக் கருத்தாலும், கண்டனத்தாலும் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையால் அல்ல. தவிர, அவர் அனைத்து தமிழ்பெண்களை பற்றியும் தவறாக கூறவில்லை. வீட்டு வேலை செய்பவர்களை வேண்டுமானால் தவறாக கூறிவிட்டார் என்று போராடுங்கள், “தமிழர்களை இழிவுப்படுத்திவிட்டார்” என்றல்ல. அப்படி போராடும் முன்பு, நம் வீட்டு வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறோம் என்று ஒருதடவை சுயஆராய்தல் நலம்.
இந்த வார கருத்து
நடிகர் அஜீத் மேடையேறி பேசி அவ்வளவாக பார்த்ததில்லை. ஒருமுறை காவிரி தண்ணீருக்காகவோ, ஈழத்தமிழர்களுக்காகவோ பேசியதாக ஞாபகம். அதுவும் “நன்றி வணக்கம்” என்று பேசி முடிக்கவே எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. பொதுவாக அவருக்கு மேடைப்பேச்சு பழக்கமில்லை என்பது என் கருத்து. மேடையிலேறி பேசுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். பச்சையாக சொல்வதென்றால் கொஞ்சம் பொய் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சக்கரை தடவ தெரிந்திரிக்க வேண்டும். யாரைப் பற்றி பேசுகிறோமோ அவரே “ கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா” என்று சொல்லும் அளவுக்கு ஐஸ் வைக்க தெரிந்திருக்க வேண்டும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே அஜீத்திற்க்கு தெரியவில்லை..நேற்று திரைப்பட உலகினர் கலைஞருக்கு எடுத்த விழாவில் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டுப்போனார்..”எந்த விழாவுக்கும் கட்டாயப்படுத்தி கூப்பிடிகின்றனர்..” காலையில் பேப்பரை திறந்து பார்த்தால் விழாவில் நடனமாடாத நடிகைகளுக்கு திரையுலகம் நோட்டிஸ் என்று இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். “நம்ம நாடு சுதந்திரம் வாங்கிருச்சுல்ல…???”
இந்த வாரக் கொடுமை
விஜய் டீ.வியில் ‘வாங்க பேசலாம்” என்று ஒரு நிகழ்ச்சி.. நடத்துபவர்கள் நம்ம டெல்லி கணேஷ் சாரும், ஐயா பெரியார்தாசனும். இந்த வாரம் கலந்து கொண்டவர் நடிகை பத்மப்பிரியா அவர்கள். இரண்டு பேரும் வழிவழியென்று வழிந்ததாக எனக்குப் பட்டது. அதற்கு பத்மப்பிரியா அவர்கள் கொடுத்த எக்ஸ்பிரசன்களால் பார்ப்பவர்களுக்கே வெட்கம் வந்துவிட்டது. பெரியார்தாசன் ஐயா, உங்கள் கருத்துகளைக் கண்டு, உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் ஆட்களில் நானும் ஒருவன்..ஆனால் அந்த நிகழ்ச்சியை நீங்களே ஒருமுறை பாருங்கள். எப்படி பேசி இருக்கிறீர்கள் என்று.. தேவைதானா இது..அதுவும் எந்தவித தயாரிப்பும் இல்லாமல் நீங்களும் டெல்லிகணேஷ் ஐயாவும் போடும் மொக்கைகள் “தாங்க முடியலீங்க..”
இந்த வார சந்தேகம்
சின்னத்திரை பாலியல் கொடுமைகளுக்கு,டைரக்டரை தண்டிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேறி இருக்கிறதாம். ஆனால், தினம் தினம் அழுது , எங்களுக்கு சோறு கிடைக்க விடாமல் செய்யும் சின்னத்திரை சீரியல் நடிகைகளையும், டைரக்டர்களையும் தண்டிக்க நாங்கள் என்ன தீர்மானம் போடுவது..
இந்த வார சாப்பாட்டுக்கடை
நீங்கள் ஊட்டி செல்கிறீர்களா..நிம்மதியாக தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஒரு ஹோட்டல் இருக்கிறது..”ஹோட்டல் பிரீத்தி க்ளாசிக் டவர்ஸ்”. அவ்வளவு தரம் மற்றும் சேவை. உண்மையிலேயே சொர்க்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. ஏதும் பிரச்சனை என்றால் ஒரு நிமிடத்தில் ஓடி வந்துவிடுகிறார்கள். அறை முழுவதும் அவ்வளவு சுத்தம். வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமானல் “அமெரிக்கா” வுல கூட இப்படி ஒரு ஹோட்டல் பார்த்ததில்லைன்னா பார்த்துக்குங்களேன்..
.jpg)









