வாரத்திற்கு ஒருமுறையாவது பெற்றோரோடு “ஸ்கைப்பில்” பேசிவிடுவேன். ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கத் தொடங்கும்போது, அப்பாவுக்கு இருக்கும் உற்சாகம் இந்தமுறை சுத்தமாக வடிந்து போயிருந்தது. மாறாக, பயம் கலந்த அதிர்ச்சியைத்தான் பார்க்க நேர்ந்தது…
“என்னடா ராசா..வாத்தியாரைப் போயி கத்தில குத்தியிருக்காய்ங்களே..”
என்றார்..அப்புறம்தான் அதிர்ச்சியுடனும், அவசரமாகவும் அந்த செய்தியைப் படிக்கநேர்ந்தது…
“ஆசிரியருக்கும் மாணவிக்கும் கள்ளத் தொடர்பு…”
“மாணவனுடன் ஓடிப்போன ஆசிரியை…”
“ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை…”
“மாணவியைக் கற்பழித்த ஆசிரியர்…”
என்று படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், இன்று ஒரே அடியாக எட்டுக்கால் பாய்ச்சலாக, “ஆசிரியையைப் போட்டுத்தள்ளிய மாணவன்” என்று புல்லரிக்கும் வகையில் முன்னேறியிருப்பதை நினைத்தால், “எங்கு செல்லும் இந்த தமிழகம்” என்று எல்லோரையும் போல, பக்கோடா கொறித்துக்கொண்டு கவலைப்பட ஆசையாக உள்ளது..
ஆனால் என் அப்பா கவலைப்படுவதற்கும், நான் கவலைப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள். ஏனென்றால் ஒரு குடும்பத்தில், ஒன்று இரண்டு பேர் ஆசிரியராக இருக்கலாம்..ஆனால், 11 பேர் ஆசிரியராக இருந்து எந்த குடும்பத்தைப் பார்த்திருக்கிறார்களா..”அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா, அண்ணிகள், அத்தான், மாமனார், மாமியார்…” என்று விகடனில் எழுதும் அளவுக்கு எங்கள் குடும்பம் ஆசிரியர்களால் நிறைந்தது..”ஒரு பயலயாவது, கம்ப்யூட்டர் படிக்க வைச்சருணும்டா” என்று அப்பாவின் அடாத ஆசையால், ஆசிரியப்படிப்பு வாசனையே இல்லாமல் வளர்க்கப்பட்டேன்
யாருக்குமே இந்த வாய்ப்பு வாய்க்காது..நான் படித்த இரண்டாம் வகுப்புக்கு ஆசிரியர் எங்கம்மா..மூன்றாம் வகுப்புக்கு என் அப்பா ஆசிரியர்..ஏழாம் வகுப்புக்கு என் அண்ணா ஆசிரியர்..பரிட்சையை ஏனோதானா என்று எழுதிவிட்டு, பரிட்சை பேப்பர் இருக்கும், பீரோவைத் திறக்க முயன்று அடிவாங்கியதெல்லாம் இப்போது நடந்த மாதிரி இருக்கிறது.
“உசிரைத் தவிர விட்டுட்டு எதை வேண்டுனாலும் பண்ணுங்கையா..என் பையன் நல்லா படிக்கணும்” என்று பல பெற்றோர்கள் என் வீட்டுக்கு வந்து சொன்னது, இன்னமும் ஞாபகத்திற்கு வருகிறது. பள்ளியில் கண்டிப்பு என்றால் அப்பாதான். முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்களுக்கு மட்டும் அடி இல்லை, மற்றவர்களுக்கு ஸ்கேல் அடிதான். கையை நீட்ட வைத்து, முழங்கையிலிருந்து விரல் வரைக்கும் பின்னி எடுத்துவிடுவார்..மகன் என்றால் கூடுதல் அடி..இதற்கு தப்பிப்பதற்காகவே “அம்மா நெஞ்சு வலிக்குது” என்று அரசியல்வாதி போல சீன் போட்ட காலங்கள் எல்லாம் உண்டு..
ஆனால், ஒன்று..அன்று ஆசிரியர், அந்த அடிஅடிக்கவில்லையென்றால், நானெல்லாம் குட்டிச்சுவராய் இருப்பேன். 4 ஆம் வகுப்பு படிக்கும்போதே தண்ணி அடிக்க வாய்ப்பு யாருக்காவது கிடைத்ததுண்டா..நண்பர்கள் அழைத்து சென்றார்கள். அதைப் பார்த்தவுடன், என் அப்பா நாக்கைத் துருத்திக்கொண்டு, ஸ்கேலை எடுக்கும் ஞாபகம் வரவே அலறியடித்துக்கொண்டு ஓடினேன்..சத்தியமாக் சொல்லுகிறேன்..இப்போதும், இங்கு உள்ள பார்ட்டிகளுக்கு செல்லும்போது, மதுபாட்டிலையும், சிகரெட்டையும் பார்க்க நேர்ந்தால், அப்பா ஸ்கேலை எடுக்கும் ஞாபகம் வருவதால், இதுவரை மது, சிகரெட் தொட்டதில்லை..
ஆசிரியர் மாணவனை அடிக்கும்போதோ, கண்டிக்கும்போது, வன்மத்துடனோ, தனிப்பட்டமுறையிலோ செய்வதில்லை. அப்படி கண்டித்தால் அவர் ஆசிரியர் இல்லை, ட்யூசன் வராததால் என்னை அடித்த இயற்பியல் ஆசிரியர் போல..
ஆனால் ஆசிரியருக்கும் வேறு வழியில்லை. இங்கு கண்டித்தாலோ, அடித்தாலோ மட்டுமே மாணவனைத் திருத்தமுடிகிறது,..”தம்பி நல்லா படிப்பா” என்று அன்பாக சொல்லிப் பாருங்கள், வாத்தியாரை வெண்ணிற ஆடை மூர்த்தி ரேஞ்சுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.. மாறாக கண்டிப்புடன் கலந்த அன்பாலே அவனைத் திருத்தமுடிகிறது..,”எப்படி சாலை விதியை மதியுங்கள்” என்று
கரடியாக கத்தினாலும், “சிக்னலை தாண்டின, மவனே அபராதம்டா” என்று சொல்லி பயமுறுத்தினால்
தான், இங்கு ஒழுங்குக்கு மதிப்பு…
அமெரிக்காவில்,
இந்த ஆசிரியர் மாணவன் என்ற செண்டிமெண்டெல்லாம் இல்லை..இங்கு ஆசிரியரை பெயர் சொல்லியே
அழைக்கிறார்கள்..சிறுவயது குழந்தை உள்பட…ஆசிரியரை நண்பனாக நினைக்கும் அளவுக்கு, இங்கு
மனப்பக்குவம் அடைந்துவிடுகிறார்கள், இங்கு உள்ள மாணவர்கள்…பள்ளிக்கு வருவது, இங்கு
ஒரு செமினார் நடப்பதுபோன்று. நிறைய விவாதங்கள், ப்ராக்டிகல் விளக்கங்கள் என்று , இங்கு
பள்ளிகளே ரசிக்கும் அளவுக்கு இருக்கிறது. அதனால், பள்ளிக்கு செல்ல எந்த குழந்தையும்
பயப்படுவதுமில்லை..மாணவனைத் திருத்தவேண்டுமே என்று எந்த ஆசிரியரும் பயப்படுவதுமில்லை..
ஆனால், நம் மாணவர்கள்,
இந்த மனப்பக்குவத்தை அடையாதது, நம் சமூகத்தின் துரதிருஷ்டம்..இங்கு அடித்தாலோ, கண்டித்தாலோ,
மட்டும்தான் மாணவன் திருந்துகிறான்…இல்லையென்றால் “எக்கேடு கெட்டாவது போடா” என்று ஆசிரியர்
நினைக்கவேண்டும்..ஆனால் அப்படி எல்லா ஆசிரியரும் நினைத்துவிட்டால், அவ்வளவுதான்..இந்த
சமூகம், ஒரு படிகூட முன்னேறமுடியாது..எல்லோரும், கெட்டு குட்டிச்சுவர்தான்.
ஆனால், “படிக்கவேண்டுமே..இல்லையென்றால்
ஆசிரியர் அடிப்பார்” என்ற பயம் மட்டுமே இருக்குமாறு ஆசிரியர் பார்த்துகொள்ளவேண்டும்..அப்படியென்றால்
அவன் படிப்பான்..முன்னேறுவான்…”ஆஹா..பள்ளி செல்லவேண்டுமே…இந்த வாத்தியாரு எப்ப பார்த்தாலும்
அடிப்பார்” என்று நினைக்க ஆரம்பித்தால், இங்கு சென்னையில் நடந்த கொலை போல பலகொலைகளை
இந்த சமூகம் பார்க்கநேரிடும் என்று வருத்தத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன்…ஏனென்றால்
நல்ல வாத்தியார் அமைந்து, கடைசி பெஞ்ச் பையன், இந்திய அளவில் முன்னேறிய வரலாறும், மோசமான
ஆசிரியர் அமைந்து நல்லபையன் கெட்டு குட்டிச்சுவராக அமைந்த வரலாறும், இங்கு நிறைய உண்டு..
கடைசியாக, ஆசிரியர்
எப்படி ஒரு சமூகத்தில் எந்த மாதிரி தாக்கத்தை உண்டு பண்ணுகிறார் என்பதற்கு ஒரு உதாரணம்…
நானும், அப்பாவும்,
ஒரு வேலை விசயமாக அரசாங்க அலுவலத்திற்கு செல்ல நேர்ந்தது…அங்கு பெரிய ரேங்கில் இருக்கும்
அதிகாரியைப் பார்க்க பெரிய கூட்டம்.. எங்கள் முறை வந்தபோதுதான் தெரிந்தது, அந்த அதிகாரி,
அப்பாவின் மாணவன் என்று..அப்பாவைப் பார்த்தவுடன், அவ்வளவு பெரிய அதிகாரி, இருக்கையை
விட்டு எழுந்து, அப்படியே காலில் விழுகிறார்..
“சார்..எப்படி
இருக்கீங்க..என்னை ஞாபகம் இருக்கா சார்..உங்ககிட்ட மூணவாது படிச்சேனே…”
கண்களில் அப்படி
ஒரு பணிவு..கையை கட்டிக்கொண்டு நிற்கிறார், அப்படியே ஸ்கூலில் நிற்பதுபோல..எனக்கு ஆச்சர்யம்..சரி,
ஸ்கூலில் படிக்கும்போது காட்டும் பணிவு, இப்போது எதற்கு..அதுவும் அவரிடம் உதவி கேட்டு
நாங்கள்தான் வரநேர்ந்திருக்கிறது..ஆனால் கடைசியாக அவர் சொன்ன வார்த்தை எனக்கு பல விஷயங்களை
தெளிவுபடுத்தியத்தியது…
“சார்…அன்னைக்கு
நீங்க என்னையெல்லாம் கண்டிக்கலைன்னா, இப்படி ஒரு போஸ்டுல நான் வந்திருக்கமுடியாது சார்..நீங்கெல்லாம்
எங்களுக்கு தெய்வம் சார்…”
சும்மாவா சொன்னார்கள்..மாதா,
பிதா, குரு, தெய்வம் என்று…