“காலையில 1 மணியிலிருந்து காத்திருக்கேன் சார்..”
“இந்தவாட்டி கண்டிப்பா வாங்கியே தீருவேன்..”
“இதோட மூணுமுறை டிரை பண்ணினேன்..முடியலை..இந்தவாட்டி கண்டிப்பா வாங்கிருவேன்..”
இதெல்லாம் அமெரிக்க விசா வாங்குவதற்கு க்யூவில் நிற்பவர்கள் அல்லது சாப்ட்வேர் கம்பெனி வேலை வாங்குவதற்கு க்யுவில் நிற்பவர்கள் சொன்னதல்ல. விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக முதல் ரவுண்டில் செலக்ட் ஆவதற்கு காலை 1 மணிக்கெல்லாம் கண்முழித்து நின்று, காலையில் மேக்அப் போட்டு மைக்கை நீட்டிய நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் திருவாய் மலர்ந்த வார்த்தைகள்..
ஒவ்வொருவர் கண்ணிலும் எப்படியாவது, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஆகவேண்டும் என்ற வெறி, தூக்க கலக்கத்தை மீறி தெரிந்தது. அதிலும், சிலபேர், முந்தைய நாளே மைதானத்தில் வந்து டெண்ட் போட்டதை பெருமையாக சொல்லியபோது, “அட..நம்ம தமிழ்நாடு சூப்பரோ சூப்பர் சிங்கராக மாறுதுங்கோ” என்று தெருப்பக்கம் வந்து கத்தணும்போல ஆசையாக இருந்தது..எவனாவது சுருதி..இது..சுதி சரியா இல்ல..நொவான்சிஸ் சரியா இல்லைன்னு குத்தம் சொல்லிருவாய்ங்களேன்னு பயம் வேற..
ஒருவிதத்தில், இதுபோன்ற சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிகள், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பாக இருக்கிறது, என்று சந்தோசப்பட்ட போதிலும், “நாலு ஸ்வரம் மேல பாட மாட்டிங்குறாய்ங்க எங்க 3 வயசுபையன்” என்று எதிர்வீட்டு அக்கா கம்ப்ளெயின் செய்யும்போது ஜெர்க் அடிக்கவைக்கிறது..
நமக்கெல்லாம் கமல் பொண்ணு சுருதி தவிர எதுவும் தெரியாது என்பது வேறு விசயம். சரி, இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து , கேள்வி ஞானத்தை வளர்த்து கொள்ளலாம் என்று பார்க்க ஆரம்பித்தால், நடக்கும் கூத்துகளால், நமக்கும் காதல் தண்டபானி குரல் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது…
தமிழ்நிகச்சியில்
தமிழிசைக்கு ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடினால், “தேடினாலும், கிடைக்காது..” என்கிறார்கள்..கர்நாடக இசைப் பாடல் பாடுபவர்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம், தமிழிசை பாடல்கள் பாடினால் கிடைக்கிறதா என்றால், விடைகிடைக்காத கேள்வியே….
சரி..யாராவது மண்மணக்கும் எங்கள் கிராமத்து பாடல்களை பாடுகிறார்கள் என்றால்..அடப்போங்க சார்..குத்துபாட்டு என்றால் கூட “ஏ..தண்ணி தொட்டு தேடிவந்த” என்ற பாடல்தானா..ஏன் எங்கள் கிராமத்துப்புறங்களில் துள்ளலிசை பாடல்களுக்கா பஞ்சம்..அல்லது, அப்படிப்பட்ட திரையிசை பாடல்களே இல்லையா..அப்படி பாடினால், அவர்களை “ப்ளூப்பர்” என்று கூப்பிட்டுவைத்து கிண்டல் செய்யும் கொடுமை வேறு…
கேள்விஞானத்தை வைத்து கொண்டு, முயற்சியாவது செய்யலாம் என்று தன்னம்பிக்கையோடு வருபவர்களுக்கு,
“சாரி சார்..நுவான்சிஸ் சரியில்லை..”
“ரெண்டாவது வரியில் சுதி சர்யில்லை..”
“தாளம் தப்புது சார்..”
“கமகம் இன்னும் நல்லா வரணும்..”
என்று அவர்களின் கனவில் புல்டோசர் வைத்து ஏற்றுவது என்ன நியாயமோ..
எனக்கு ஒன்று தெரியவில்லை..ஒருவர் பாடகராக ஆகவேண்டுமானால் கண்டிப்பாக கர்நாடக இசை தெரிந்திருக்கவேண்டுமா..நன்றான குரல்வளமும், சற்று கேள்விஞானமும், தமிழை நன்றாக உச்சரிக்கும் திறமையும் போதாதா..அப்படி தெரியாவதர்கள், முதல் அல்லது இரண்டாவது ரவுண்டிலே துரத்தியடிக்கப்படுவதை பார்க்க முடிந்தது…
வழக்கம்போல, இந்த தடவையும் ஏதொ ஒரு “ஸ்ரீராமோ”, “நாராயணனோ” “அஸ்வினோ” அல்லது ஏதாவது “மேனன்” தான் சூப்பர் சிங்கர் டைட்டில் வாங்கப் போகிறார்கள். ஆனாலும் எங்க ஊர் கணேசனோ, முருகனோ ஒருமுறையாவது, தவறி டைட்டில் இல்லை அட்லீஸ்ட் இரண்டாவது ரவுண்டுக்காவது வந்துவிடுவோனோ என்று தேடிகொண்டிருக்கிறேன்…..ம்..ஹீம்..தமிழ்நாட்டில் அல்லவா பிறந்திருக்கிறோம்…