Friday 25 December, 2009

ஒலக சினிமா பார்த்த அனுபவம்

(இன்டெர்நெட் சென்டரில் தமிழில் டைப் செய்யும் வசதி இல்லாததால், பின்னூட்டத்திற்கு பதில் எழுத முடியவில்லை..மன்னிக்கவும்..இன்டெர்நெட்டிற்கு விண்ணப்பித்துள்ளேன்)

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேன். சனிக்கிழமை ராத்திரி ஷிப்ட் முடித்து வரும்போது தெரு நாய்களுக்கு பயந்து ஓட்டப் பந்தயம் நடத்திய களைப்பால் நன்றாக தூக்கம் வந்தது. காலையில 4.30 மணி இருக்கும், உள்ளங்காலை யாரோ சுரண்டுற மாதிரி ஒரு உணர்வு. வீட்டில் நிறைய பெருச்சாளிகள் இருப்பதால் தட்டி விட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ணினேன். கொஞ்ச நேரம் பார்த்து “ராசா..ராசா.. என்று ஆசையா கூப்பிடுற மாதிரி சத்தம்ணே..கண் முழிச்சு பார்த்தால் நம்ம நண்பன் கோவாலு..நல்லா தலை குளிச்சிட்டு, பவுடர் போட்டு பொண்ணு பார்க்க போற மாதிரி உக்கார்ந்து இருக்காண்ணே..எனக்குனா செம கடுப்பு..

“டே கோவாலு..என்னடா வேணும்…காலங்காத்தால 04:30 மணிக்கு பேய் மாதிரி எழுப்பி விடுற..
“ராசா..வாடா..ஒலக சினிமாவுக்கு போகலாம்..
“டே..கோவாலு.வெறியைக் கிளப்பாத..
“அடப்பாவி ராசா..நீதானடா 05;30 மணிக்கு உலக சினிமாவுக்கு போகலாம்னு சொன்ன..
“அட நாயே..ஏண்டா..05:30 மணின்னா காலங் காத்தாலயாடா?..சாயந்திரம்டா..
“ராசா..நீ அத சொல்லவே இல்லியேடா..
“அத விடு கோவாலு..நீதான் வில்லு படம் பார்க்குற ஆளாச்சே..நீ எப்படி ஒலக சினிமா..??
“இதுக்கு என்னடா கூச்சம்..அது சரி மேட்டர் போடுவாயிங்கள்ள..
“அடப்பாவி..அது என்னடா மேட்டர்..
"அதுதான்டா சீன்.."
“அடங்கொய்யாலே..பரங்கிமலை ஜோதியில பகல் காட்சிக்கு போற மாதிரி சொல்றேயேடா..டே..இது ஒலக சினிமாடா..வேற மாதிரி இருக்கும்..
“ஏண்டா..அதுவும் உலக சினிமாதானடா..
“டே..கோவாலு..நான் ஆட்டத்திற்கு வரலை..ஆளை விடு..
“ஆமாண்டா ராசா..யாருடா படம் போடுறா..
“தெரியலடா..லக்கிலுக்கு வர சொல்லியிருந்தாரு..அதுதான் போகலாமுன்னு..

கோவாலு காண்டாகிட்டான்..புல்மீல்ஸ் எதிர்பார்த்து வந்தவனுக்கு கடலை முட்டாயை கொடுத்தா எப்படி இருக்கும்..கோவாலு அவ்வளவு கெட்ட வார்த்தை திட்டி பார்த்தது இல்லைண்ணே..கடுப்புல என் போர்வையே பிடிங்கிக்கிட்டு தூங்கிட்டாண்ணே..

நானும் சாயங்காலம் 04:00 மணிக்கெல்லாம் ஒலக சினிமா பார்க்க ரெடியாகிட்டேண்ணே..சரி மனைவிக்கு ஒரு போன் பண்ணிடலாமுன்னு நினைத்தேன்..

“ஏங்க..சென்னை எப்படி இருக்கு..
“நல்லா இருக்கு.பதிவர் சந்திப்புக்கு போறேன்..
“அய்யோ..எதுக்கு அங்க எல்லாம்..
“இல்லை..போரடிக்குது..அதான்..
“சரி..ஹெல்மெட்டை போட்டுட்டு போங்க..எந்த சந்தர்ப்பத்துலயும் ஹெல்மெட்டை கழட்டாதீங்க..
“ஏண்டி..
“நீங்க வேற எல்லாத்தையும் கலாய்ச்சிட்டீங்க..யாராவது மூக்குல குத்திட்டா..
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்..

மனதில் ஒரு பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. என் பல்சர் எடுத்துக்கொண்டு ஆழ்வார்பேட்டை சென்றேன்..எனக்கு தெரிந்ததெல்லாம் கமல் வீட்டிற்கு பக்கத்தில் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடுகிறார்கள்..ஆழ்வார் பேட்டை முழுவதும் சுத்தி விட்டேன். ஒரு பயலுக்கும் கிழக்கு பதிப்பகம் தெரியல…கடைசியில் ஒரு ஆட்டோக்காரர் மாட்டினார்..

“அண்ணே..இங்க கிழக்குப் பதிப்பகம் எங்க இருக்கு..
“கியக்கு பதிப்பகமா..இன்னாப்பா அது..
“புத்தகமெல்லாம் போடுவாயிங்கள்ள..
“தெரியிலப்பா..
“கமல் பக்கத்து வீட்டுல இருக்குதுன்னு சொன்னாங்க..
“ஆஹாங்க்…அப்படி பிரியுற மாதிரி சொல்ல வேண்டியது தான..அப்படியே லெப்ட் ஓரம் கட்டியே போனேன்னா..நாலாவது வீடு..கமல் இங்கதாம்பா இருக்காரு..கவுதமியும் கூடத்தாம்பா இருக்கு..ஹி..ஹி
“அண்ணே..கவுதமி இருந்தா என்ன..சிம்ரன் இருந்தா எனக்கென்ன..நான் என்ன கிசுகிசுவா எழுதுறேன்..

அது என்னண்ணு தெரியலண்ணே..மெட்ராஸ்ல எல்லாரும் சூடாவே இருக்காயிங்க..கோபத்துல ஒரு கெட்ட வார்த்தையை சொல்லிட்டு போயிட்டாரு.. அப்படி இப்படின்னு ஒரு மணி நேரம் கழித்து கிழக்கு பதிப்பகம் கண்டு பிடித்தேன்..எனக்கு என்ன பயம்னா..ஒரு நூறு பேர் இருந்தா, எனக்கு சீட் கிடைக்குமா..நின்னுக்கிட்டுதான் பார்க்கனுமா..07:00 மணி வேற ஆகிடுச்சே..படம் பார்த்தாலும் புரியுமா..பல கேள்விகளுடன் கதவைத் திறந்தேன்..பார்த்தா..மொத்தம் 15 சேர் இருக்கும்..7 பேர் உக்கார்ந்து இருந்தாங்க..கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்..இடம் மாறி வந்து விட்டமோ..யாருகிட்டயாவது படம் எப்ப போட்டாயிங்கன்னு கேக்கலாமுன்னு பார்த்தா அத பதிவுல போட்டுறுவாயிங்கன்னு பயம் வந்தது..

அப்படியே ஒரு சீட்டைப் பிடித்து உக்கார்ந்தேன்..படம் ஒன்னும் புரியலை..எங்கயோ குண்டு வெடிக்குது.ஒரு பெரியவர் காலை தண்ணி ஊற்றி கழுவுகிறார்..ஒரு பெரிய பாழடைந்த பங்களாவில் ஒரு பெண் தனியாக நடந்தார்..எனக்கு தலை சுற்றியது..எனக்குப் பின்னால் இருந்த 2 பேர் அப்பவே எஸ்கேப் ஆனார்கள்..

நானும் எஸ்கேப் ஆகலாமுன்னு பார்த்தா, எங்க “ஞான சூன்யம்” ன்னு சொல்லிருவாயிங்களோன்னு பயம் வேற..பல்லை கடிச்சுட்டு உக்கார்ந்து இருந்தேன்..பக்கத்துல ஒருத்தருக்கு போன் வந்தது..அவர் வெளியே போய் போன் எடுக்கலாமுன்னு போனவரு அப்படியே எஸ்கேப்பு..அப்பதான் எனக்கு பொறி தட்டுச்சு..ஆஹா..அப்படியே நம்ம கோவாலுக்கு ஒரு மிஸ்டு கால் போட்டேன்..பய புள்ள எதிர் பார்த்த மாதிரியே கால் பண்ணினான்..போன் எடுக்க வெளியே போற மாதிரி “கோவாலு..இங்க நிலைமை..சாரி..டவர் சரியில்லை..நான் வெளியே வந்து பேசுறேன்.. அப்படியே ஓடிப்போய் பல்ஸரை எடுத்துட்டு விட்டேன் பாருங்க ஓட்டம்..ரெண்டு தெரு தள்ளி நிப்பாட்டுனேன்னே..ஒரு தள்ளு வண்டியில இட்லி, தோசை வைத்து தந்தாயிங்க பாருங்க..அப்பா..அதுதான்னே ஒலகம்..அப்படியே ஒலகமே என் கையில வந்த மாதிரி இருந்தது..போன் அடித்தது..மனைவிதான்..

“என்னங்க..உலக சினிமா எப்படி இருந்தது..
“ம்….இருந்தது..
“ஏங்க..ஒரு மாதிரி பேசுறீங்க..யாராவது, மூக்குல குத்திட்டாயிங்களா..
“போடீங்க..படம் பார்த்து நம்மளே நாமே மூக்குல குத்திக்கிட்டாதான் உண்டு..
“சரி..இப்ப வீட்டுல போய் என்ன பண்ண போறீங்க..
“வேற என்ன..பதிவு எழுதனும்..

“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..நீங்கெல்லாம் பதிவு எழுதியே சாகப்போறீங்க..

Saturday 19 December, 2009

வேட்டைக்காரன்

(வீட்டில் இன்டெர்நெட் வசதி இல்லாததால், பின்னூட்டத்திற்கு பதில் எழுத முடியவில்லை..மன்னிக்கவும்)

நண்பர்கள் “வேட்டைக்காரன்” படம் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருப்பார்கள் போல்..என்னையும் இழுத்து கூட்டிக் கொண்டு போனார்கள். பொதுவாக நான் விஜய் படங்களின் டிரெய்லர் மட்டுமே பார்ப்பேன்.அதுவே முழுக்கதையும் சொல்லிவிடும்..ஆனால், நேற்று நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன், ஏழரை நாட்டு சனி, தியேட்டர் வரைக்கும் கொண்டு சென்றது..

தியேட்டர் வாசலை அடைந்தபோது, வழக்கம்போல் கட் அவுட் பேனர்களில், விஜய் கோபத்துடன் தெரிந்தார்..அப்போதே ஓடி வந்து இருக்க வேண்டும். இதில் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர் பெருமக்கள் “அறம் செய்ய விறும்பு, வேட்டைக்காரன் பக்கம் திறும்பு” என்று தமிழ் மேல் புல்டோசர் விட்டு ஏத்தியிருந்தார்கள். இன்னொரு பேனரில் “எவன்டா ரெட்டு..எங்க வேட்டைக்காரந்தான்டா ஹிட்டு” என்று அஜித்துக்கு எச்சரிக்கை செய்திருந்தார்..இன்னொரு பேனரில் “நெருப்பை தீண்டியவரில்லை..எங்கள் போக்கிரியை தொட்டவருமில்லை” என்று தீயின் பெருமையை சொல்லிக் கொண்டிருந்தார்..எங்கு பார்த்தாலும் மனித தலைகள்..
தியேட்டரின் வாசலை அடைத்திருந்தார்கள்..தியேட்டர் வாசலை தள்ளிக்கொண்டு ரசிகர் பட்டாளம்.எல்லோருக்கும் 20-30 வயதுதான் இருக்கும்..ஒரே நேரத்தில் தியேட்டர் கதவை தள்ளிக் கொண்டு நின்றார்கள்..சாதிக்க நினைக்கும் வயதுள்ள இளைஞர் பட்டாளம்..தண்ணி, பான்பராக் போட்டு விட்டு மூத்திர சந்தில் தியேட்டர் கதவை தள்ளிக் கொண்டு நின்ற போது இந்தியா கண்டிப்பாக வல்லரசாக மாறி விடும் என்ற நம்பிக்கை வந்தது..விஜய் அடிக்கடி சொல்வது போல் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி, குட்டி ரசிகர்கள்” வலுக்கட்டாயமாக அம்மா தோளில் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்..அந்த குட்டி குட்டி ரசிகர்களுக்கு 1 முதல் 2 வயது இருப்பதுதான் கொடுமை..

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிற்பது போல் இளைஞர் பட்டாளம், கியூவில் நின்றது..அனைவரில் கண்களிலும் அப்படி ஒரு வெறி, அன்று படம் பார்த்தே தீருவது என்று. இதே வெறியை படிப்பதில் காட்டியிருந்தால், சென்னையில் குடிசைகளே இல்லாமல் இருந்திருக்கும். ஒருவழியாக கவுண்டரை அடைந்தேன்..
“3 டிக்கெட் குடுங்க..”
“300 ரூபா கொடு சார்..”
“என்னங்க..120 ரூபா தானங்க..”
“அய்ய..ஊருக்கு புதுசா…ஒரு வாரத்துக்கு 100 ரூபாதான்..அப்பால வா..”
கடுகடுத்துக் கொண்டே டிக்கெட் வாங்கினேன்..
“என்னடா நண்பா, டிக்கெட் வாங்கிட்டியா..”
“டே..இது என்னடா அநியாயமா இருக்கு..100 ரூபாயா..40 ரூபாயதனடா இருந்துச்சி”
“ஆமாண்டா..அதெல்லாம் முன்னாடி..இப்பதான் கவர்மெண்ட் சொல்லிருச்சே..முதல் மூன்று வாரத்திற்கு தியேட்டர் விலை நிர்ணயம் பண்ணிக்கலாம்னு..”
கடுப்பாக இருந்தது..பக்கத்தில் இருப்பவர் வாரப்பத்திரிக்கை படித்துக் கொண்டுருந்தார்..நடுப்பக்கத்தை விரித்த போது கண்ணில் பட்டது..”திரையுலகம் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா”..இருட்டில் தட்டு தடுமாறி கொண்டு சீட்டை அடைந்தபோதுதான் மூச்சே வந்தது..கொஞ்சம் சொகுசாக உக்காரலாம் என்று கைப்பிடியின் மேல் கையை வைத்தபோது கைப்பிடியை காணவில்லை..வெறும் இரும்பு கம்பி ராடு தான் இருந்தது….அந்தநேரம் பார்த்து டிக்கெட் கைதவறி விழுந்தது.அதை எடுத்து சரிபார்க்க திறந்தபோது கொட்டை எழுத்தில் “கேளிக்கை வரி 10 ரூபாய்” என்று எழுதியிருந்தது..

திடீரென்று காதை கிழிக்கும் விசிலோசை..திரை ஒளிர தொடங்கியது..”பிலிம் டிவிசன்” என்று “ பாரத பிரதமர் 10 நாள் வெளிநாட்டு பயணம்..” என்று தொடங்கியபோது..பின்னால் இருக்கும் இளைஞர் பட்டாளம் “டே..**** மவய்ங்களா..படத்தை போடுங்கடா..” என்று அலற தொடங்கியது..ஒரு வழியாக நியூஸ் ரீல் துவங்கியபோது காது சவ்வு கிழிய ஆரம்பித்தது..படம் துவங்கியபோது, படத்தில் ஒருவர் கொடுத்த காசுக்கு மேல் விஜயை புகழ்ந்து கொண்டிருந்தார்….காலிலிருந்து ஆரம்பித்து, அப்படியே மேலே விஜயை காண்பித்தபோது விசில் சத்தம் டி.டீ.எஸ் சவுண்டை விடக் கேட்டது…அப்துல் கலாம் கனவு கண்ட ஒரு இளைஞன் எழுந்து “இளைய தளபதி விஜய் வாழ்க” என்று அடித்தொண்டையில் கத்திய போது புல்லரித்தது..


விஜய் வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசும் போதும் “தலைவா பின்னிட்ட போ..” என்று சத்தம் காதைப் பிளந்தது,,.படத்தில் கதை என்று சொல்வது என்றால்..ம்..ம்…ம்…ம்…வழக்கம்போல் ஒன்றுமேயில்லை..விஜய் வழக்கம் போல் பஞ்ச் டயலாக் விடுகிறார்..எதிரிகளை ஒரே ஆளாக தூக்கி புட்பால் விளையாடுகிறார்..வில்லனிடம் சவால் விடுகிறார்..அனுஷ்காவுடம் ரொமான்ஸ் செய்கிறார்..காமெடி நடிகர் வேறு இல்லாததால் காமெடி செய்ய முயற்சித்து உசிரை எடுக்கிறார்..அனுஷ்கா வழக்கம்போல் ஹீரோக்கள் படத்தில் வரும் ஊறுகாய்..கேமிரா விஜய் சண்டை போடும்போது சும்மா சுழட்டி சுழட்டி அடிக்கிறது…எடிட்டிங்குக்கு சிரமமேயில்லை..ஒரு கட்டிங்க்..ஒரு ஒட்டிங்க்..மனதுக்கு ஒரே ஆறுதல் விஜய் ஆண்டனி இசை..பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன..

படத்தைப் பார்த்தபோது ஒன்று மட்டும் தெரிந்தது..”இன்னும் விஜய் திருந்தவில்லை..இனிமேலும் திருந்தவும் மாட்டார்..” இடைவேளையில் எழுந்து வர முயற்சித்தேன்…என்னுடைய பைக் பார்க்கிங்க் நடுவில் மாட்டிக் கொண்டதால் தியேட்டர் ஊழியர் அனுமதிக்கவில்லை….நொந்து கொண்டே, படம் முழுவதையும் பார்த்தபோது எப்போதும் எனக்கு வந்திராத தலைவலி வந்தது..அப்படியே தலையை பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது எங்கேயோ காற்றை கிழித்துக் கொண்டு குரல் கேட்டது..

“அடுத்த முதலைமைச்சர் விஜய் வாழ்க….”
இதுபோன்ற ஆட்கள் இருக்கும் வரை விஜய் முதலைச்சர் என்ன, பிரதமர், ஜனாதிபதி கூட ஆகலாம்..எனக்குப் பிடித்த பி.எஸ் வீரப்பா சொன்ன டயலாக்குதான் நினைவுக்கு வந்தது..

“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”

Monday 7 December, 2009

யப்பா சாமி…முடியலண்ணே…தொடர்ச்சி


ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையைப் பார்த்து 2 வருடங்கள் ஆயிருந்தாலும், ஏதோ எல்லாவற்றையும் புதிதாக பார்ப்பது போல இருந்தது. சில்லென்று பெய்யும் மழை, அநியாய வட்டி மாதிரி மீட்டருக்கு மேல் வாங்கும் ஆட்டோக்கள், காலையில் பல்விளக்காமல் குடிக்கப்படும் காபி, 9 மணிக்கு மேல் எந்தக் கடையில் கேட்டாலும் கிடைக்காத தினத்தந்தி, ஏதோ நாளை உலகம் அழியப்போவது போல் பரபரப்பாக திரியும் வாகனங்கள், மழையால் நாசமாகிப் போன ரோடுகள், பின்னால் உக்கார்ந்து இருப்பவர்களை மதிக்காமல் துப்பப்படும் பஸ் ஓட்டுனரின் எச்சில், மேலை நாட்டு நாகரிகத்திற்கு மாறி விட்டோம் என்று காண்பிப்பதற்காக ஸ்பென்ஸர் பிளாசாவில் 60 ரூபாய்க்கு வாங்கப்படும் பர்கர்., எங்கு சென்றாலும் கத்தி, கத்தியே உசிரை எடுக்கும் எப்.எம் கள்..”அம்மா செத்துட்டாங்களா..சோ..ஸ்வீட்..அம்மாவுக்கு என்ன பாட்டு டெடிகேட் பண்ணணும்” என்று கூசாமல் கேட்கும் சன் மியூசிக் தொகுப்பாளினி..இன்னும் பல..இப்படியே எழுதிக் கொண்டு போகலாம்..ஆனால் “அமெரிக்கா போயிட்டு வந்தவயிங்க மாதிரி நீங்களும் பேச ஆரம்பிச்சிட்டீங்களா..” என்ற விமர்சனம் வந்து விழுவதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..

ஐ.டி ஹைவே பயங்கரமாக இருக்கிறது…எல்லாம் கமர்சியல்..முன்பெல்லாம் சோழிங்கநல்லூர் செல்லும்போது ஏதோ பாலைவனத்தில் செல்வது போல் இருக்கும். ஆனால் இப்போது ஏதோ நரகம் சாரி, நகரத்திற்குள் செல்வது போல் இருக்கிறது. அதுவும் நீங்கள் இரவு பணியில் வேலை பார்த்தால், பாடு திண்டாட்டம். நான் இரவு 2 மணிக்கு என்னுடைய பல்சரில் ஆபிஸில் இருந்து கிளம்பும்போது என்னை முதலில் வரவேற்றது ரோட்டை மறைத்து நின்ற மாடுகள்..பகலில் எங்கிருங்கும் என்றே தெரியவில்லை..என்னை தாண்டி எப்படி போக முடியும் என்ற அலட்சியப் பார்வையுடன் ரோட்டை மறைத்து நின்ற போது ரோட்ட்டில் இறங்கி “பேச்சி..பேச்சி..” என்று பாடும் எண்ணம் வந்தது. அதை சமாளித்து அடுத்த ரோட்டில் வந்தால் மம்மி படத்தில் வருமே அது போல உங்களை கரம் வைத்து விரட்டும் பூச்சிகள்..தெரியாமல் ஹெல்மட் போடாமல் ஓட்டி விட்டேன்..ஒரு பூச்சி என் காதுக்குள்ள போய், ஒன்னுமில்லையே என்று திரும்ப வந்தபோது உயிர் போனது..

அதை தாண்டி வந்தபோது அடுத்து உங்களை வரவேற்பது நம்ம நண்பர்களான தெரு நாய்கள்..ஏதோ கடன் வாங்கியவனை விரட்டுற மாதிரியே விரட்டுதுண்ணே..உசிரே போயிடுது..ஒரு நாயெல்லாம் பஸ் ஸ்டாண்டுல இருந்து வீடு வரைக்கும், ஒலிம்பிக்ல ஓடுற மாதிரி விரட்டுது..அப்படி ஓடுற வழியில, ஒவ்வொரு தெரு நாய்களுக்கும் ஒரு சிக்னல் கொடுத்து ஒவ்வொன்னும் ரேஸ்ல ஜாய்ன் பண்ணிக்குதுண்ணே..

சரி எவ்வளவு ஓட்டினாலும் துரத்துதேன்னு கொஞ்சம் நிறுத்துனால அதுகளும் நின்னு ரெஸ்ட் எடுக்குதுண்ணே..சரி ஹெல்மெட்டை பார்த்துதான் குலைக்குதுன்னு ஹெல்மட்டை கழட்டுனா, என் மூஞ்சியைப் பார்த்து பயந்து அதுக ஓடுறப்ப அழுகை அழுகையா வந்துருச்சுண்ணே..

அமெரிக்கா பகுமானமா என்று நீங்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லைண்ணே..கேட்டே தீருவேன்..
“எப்படிண்ணே..சமாளிக்கிறீங்க..”

Sunday 6 December, 2009

யப்பா சாமி…முடியலண்ணே…


பதினைந்து நாளா எழுத முடியாததால தம்மடிச்சு நிறுத்தின மாதிரி கையெல்லாம் நடுங்குதுண்ணே..ஒருவழியா அமெரிக்காவிலிருந்து சிங்கார(!!!!) சென்னை வந்து சேர்ந்தாச்சுண்ணே..ஆனா, அதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே..யப்பா..சாமி..முடியலண்ணே..ஏதோ மறு ஜென்மம் எடுத்த மாதிரி இருக்குண்ணே..


அமெரிக்காவில் இருந்து கிளம்புறப்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..வழக்கம் போல “ராசா..நீ இல்லாம எப்படி..இங்க..”, “ராசா..ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருக்கு..” “ராசா..போய் கடிதாசி போடுடா..” “ராசா..எங்களையெல்லாம் ஞாபகம் வைச்சிருப்பியா..” டயலாக்குகள்..ஆனால் இதெல்லாம் முதல் பிரிவை சந்திக்கும்போதுதான் வியப்பாக இருக்கும்..எனக்கு இதெல்லாம் ஏதோ வழக்கமாய் கேட்பது போல்தான் இருந்தது…..நண்பர்களின் வழியனுப்பு, புகைப்பட படலங்கள், கூட்டாஞ்சோறு என்று தொடக்கமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது,,.


சின்சினாட்டியிலிருந்து நியூயார்க் வந்து இறங்கியபோதுதான் பிரச்சனை ஆரம்பித்தது..வெளிநாட்டு விமானம் பிடிப்பதற்கு 3 மணி நேரம் முன்பாக செல்ல வேண்டும் என்பதை அலட்சியப்படுத்தி விட்டு வயிற்று பசிக்காக விமான நிலையத்தில் ஒரு ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் “செக்யூரிட்டி” செக்குக்காக நிக்கிறாயிங்க பாருங்க..அம்மன் கோயில கூழ் ஊத்துற மாதிரி..அம்புட்டு பெரிய க்யூண்ணே..சரி 1 மணி நேரம் தானே என்று நின்றால்..போகுது போகுது..போய்கிட்டே இருக்குண்ணே..ஏர் இண்டியா விமானமே எனக்காக பத்து நிமிசம் லேட்டா கிளம்புச்சுன்னா பார்த்துக்குங்களேன்(விமானத்துல இருக்குறவியிங்க முறைச்ச முறைப்பு இருக்கே..யப்பாடி..எம்புட்டு அவசரமா இருக்காயிங்க..)

ஒரு வழியா..அப்பா..என்று பெருமூச்சு விட்டுக்கிட்டு ஏறி உக்கார்ந்தா..பக்கத்துல இம்பாந்தண்டி வெயிட்டா ஒரு ஆசாமிண்ணே..அவர் ஒன்றரை சீட்டை எடுத்துக்கிட்டு எனக்கு அரை சீட்டை கொடுக்குறாருண்ணே..இதுல “நல்லா கம்பெர்டபிளா உக்காருங்க” ன்னு டயலாக் வேற..ஹெல்ப் பண்றாராருங்களாம்மா…மனசாட்சியே இல்லாம் அவ்வளவு பெரிய சீட்டு குடுத்து இருந்தாலும் என் மேலேயே தூங்கி தூங்கி விழுகுறாருண்ணே..அவ்ர்கிட்ட இருந்து காற்று மூணு பக்கமும்(மூக்கு, வாய்..., ****) வருதுண்ணே..இதுல நடுவுல தூக்கத்துல வேற எழுந்து, நல்லா தூங்கிக்கிட்டு இருக்குற என்னை எழுப்பி “ஏதோ உசிலம்பட்டி வந்துருச்சா” ங்கிற மாதிரி “பம்பாய் வந்திருச்சா” ன்னு கேக்குறப்ப எல்லாம் எப்படி இருக்குமுண்ணே..விமானத்துல சாப்பிடுறதுக்கு கொடுத்து இருக்கிற சின்ன முள் கரண்டியை எடுத்து ஒரே குத்து குத்தலாமுன்னு கடுப்பு ஏறுச்சுண்ணே..


இதுல விமானத்துல ஓசியா கிடைக்குற விஸ்கி பிராந்தி எல்லாம் ரவுண்ட் கட்டி அடிக்குறாருண்ணே..ஊறுகாய் கேக்காத குறைதான்..பதினாலு மணி நேரம் கழுகு பக்கத்துல உக்கார்ந்து இருக்கிற கோழிக்குஞ்சு மாதிரியே உக்கார்ந்து இருக்கேண்ணே..ஒரு வழியா மும்பை வழியா சென்னை வந்தப்புறம்தாம் மூச்சு வந்துச்சுண்ணே..சென்னை ஏர்போர்ட்….இங்கு உள்ளவர்களில் சிலர் மூச்சு முழுக்க லஞ்சம்தான்னே..கடமையை செய்யிறதுக்கே லஞ்சம்(இந்தியன் டயலாகுதான்)..என்னுடைய ஒரு லக்கேஜ்ஜை காணவில்லை..நான் பட்ட கஷ்டம் இருக்கே..என்னுடைய அம்மா அப்பாவிற்கு ஆசை, ஆசையா வாங்கிட்டு வந்தது எல்லாம் அதுக்குள்ளதானே இருந்தது...ஒரு பயலும் பொறுப்பா பதில் சொல்லா மாட்டுறாயிங்க….பிச்சைக்காரன் மாதிரி ஒவ்வொருதரா போய் கெஞ்சுரேண்ணே..கிடைக்குற ஒரே ரெடிமேட் பதில் “எழுதிக்கொடு வரும்”..எவ்வளவு அலட்சியம்..சே..


லக்கேஜ் எஸ்கலேட்டரில் வர்றப்ப யார் யாரோ வந்து எடுத்துட்டு போறாயிங்க..யாரும் கேக்குறது இல்ல..நான் கேக்காமலே ஒருத்தர் என் லக்கேஜை தூக்கி டிராலியில் வைத்து விட்டு என் அருகில் வந்தார்..


“பத்து டாலர் குடு சார்..”

“எதுக்குண்ணே..”

“லக்கேஜ் தூக்கி வைச்சேன்ல..”

“நான் கேக்கவே இல்லையே..”

“அதானால் இன்னா சார்..ஏர்போர்ட் வந்தா அது எங்க லக்கேஜ்ஜூதான்..”

“அதெல்லாம் கொடுக்க முடியாது..என்ன விளையாடுறீங்களா..”

“அய்யே..லக்கேஜை வழிச்சிட்டு போ சார்..”

“வழிச்சிட்டா..அப்படின்னா..”

“ஒத்திக்க சார்..”

“அப்படின்னா..”

“அய்ய..தமில் பிரியாதா..அக்காங்க்..”


ஏர்போர்ட் முழுவதும் கொள்ளை..கொள்ளை..கொள்ளை..முகமுடி போடாதுதான் பாக்கி..அப்படியே லக்கேஜை இஸ்துக்கின்னு..சாரி..தள்ளிக்கின்னு..சீ..தள்ளிக்கொண்டு(எம்புட்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு) மதுரை செல்வதற்காக உள்ளூர் ஏர்போர்ட் வந்தேன்..பசின்னா பசி..அப்படி ஒரு பசி..சரி ஏதாவது சாப்பிடுவோமேன்னு சொல்லி ஒரு பப்ஸ், ஒரு காபி வாங்கினேன்னே..75 ரூபா கேக்குறாயிங்க..எனக்கு ஒரு சந்தேகம்..என் பெயரை சொல்லி யாராவது சாப்பிட்டு போயிட்டயிங்களோ..


“அண்ணே..ஒரு பப்ஸ்..ஒரு காபிதான்.”

"அதுதான் 75..”

“எப்படிண்ணே..”

“ஒரு பப்ஸ் 30, காபி 35..”

ஆத்தாடி..ஏண்ணே..2 வருசத்துல இப்படி ஒரு வளர்ச்சியாண்ணே..நாசாமா போற வளர்ச்சி..கடுத்துகிட்டே காசை கொடுத்துக்கிட்டு “ஜெட் ஏர்வேஸ்” பிளைட் ஏறுனேன்னே..சரி சாப்பிட ஏதாவது தருவாயிங்கன்னு பார்த்தா..வந்தான் பாருங்க..ஒருத்தன்…டிராலியை தள்ளிக்கிட்டு “டீ..காபி..போண்டா” விக்கிறவன் மாதிரி..”யார் யாருக்கெல்லாம் வேணுமோ காசு கொடுத்து வாங்கிக்குங்க…”

எனக்கு கொலைப் பசிண்ணே..சரி ஏதோ ரெண்டு பிரட்டை மடிச்சு வைச்சு “வெஜ் சாண்ட்ச்” ன்னு ஏதோ சொல்லுராயிங்கன்னு விலையைக் கேட்டா..ஆத்தாடி..”250” ரூபாண்ணே..இதுல என் பக்கத்துல உக்கார்ந்து இருக்குற ரெண்டு மதுரைக்காரயிங்க வேற பகுமானத்துக்கு ஒரு 500 ரூபா நோட்டை நீட்டி “டூ சாண்ட்விச்” ன்னு இங்கிலிபீச்சுல பேசுறப்ப அழுகை, அழுகையா வந்துருச்சுண்ணே..ஏண்ணே..நாட்டுல 500 ரூபா நோட்டு ரொம்ப புழக்கமோ..ஊருக்குள்ள ரிசர்வ் பேங்க் ஏதாவது ஆரம்பிச்சுருக்காயிங்களா..

(கடுப்பு தொடரும்….)