விருந்தின் போது, சிலநேரங்களில், உணவு பற்றாக்குறையானால், அதை சமாளிப்பதற்காக, அவசரமாக, “உப்புமா” செய்து சமாளிப்பதுண்டு..ஆனால், அந்த உப்புமாவே, சிலநேரங்களில், அசத்தி, “அடடா..இதை முன்னாடி பரிமாறியிருக்கலாமோ” என்று வியக்கவைத்ததுண்டு..அதுபோல, சமீபகாலமாக, ஒரே மாதிரி, ஸ்டீரியோடைப் படங்களாக வந்துகொண்டியிருந்த வேளையில், “விஜய் ஆண்டனியெல்லாம் நடிக்கிறாரா..கண்டிப்பாக உப்புமா படமாத்தான் இருக்கும்” என்று எண்ணிப் பார்க்க அமர்ந்தால், அப்படி ஒரு வித்தியாசமான அனுபவம்..
வழக்கம்போல, நான் எழுதும் விமர்சன பதிவுகளில், கதை சொல்லும் பழக்கம் இல்லை. அண்ணன் உண்மைத்தமிழன் பதிவுகளைப் படித்தால், கதை என்ன, படத்துக்கே போகவேண்டியதில்லை. நீயூஸ் ரீலிருந்து, கடைசியாக, தியேட்டரில் படம் முடிந்து சிதறி கிடக்கும் பாப்கார்ன் வரை, ஒரு வரிவிடாமல் தெளிவாக எழுதியிருப்பார். சிலநேரங்களில், “நாலாவது சீட்டில் இருந்தவர், 10 ஆவது சீன் நடந்துகொண்டிருக்கும்போது, ஒன்னுக்கடிக்க பாத்ரூம் எழுந்து சென்றார்” என்ற ரேஞ்சுக்கு எழுதியிருக்கும் துல்லியத்தைப் பார்க்கும்போது, அண்ணனின் அயராத உழைப்புக்கு ஒரு சல்யூட்..ஆனால், தியேட்டர்காராய்ங்க, அண்ணனை கொலைவெறியோடு தேடிக்கொண்டிருப்பதாக தகவல்..பின்ன, ஒரு 500 டிக்கெட்டுக்காவது
வேட்டு வைத்திருப்பதானால், அண்ணன் மேல், தியேட்டர்காரர்களுக்கு அப்படி ஒரு கோபமாம்..பொதுவாக, நேர்மையாக எழுதும் அண்ணன், சிலநேரம் தடுமாறி, “ராட்டினம்” போன்ற மொக்கைப் படங்களை எல்லாம், “உலகப்பட ரேஞ்சுக்கு” எழுதி, கோபத்தை வரவைப்பதுண்டு..(ஆஹா..விட்டா, நான் பட விமர்சனத்தை விட , அண்ணன் பிளாக்கு விமர்சனமாகி விடும் போல இருக்கே..)
சரி “நான்” படத்துக்கு செல்வோம்..எப்படி, சொல்லாமல், கொள்ளாமால், “மௌன குரு” என்ற படம் வந்து, “யாருய்யா, இது” என்று திரும்பி பார்க்க வைத்ததோ, அது போல ஒரு எக்சலண்ட் திரில்லரை பார்த்த அனுபவம் கிடைக்கிறது. சிறுவயதிலேயே, அம்மாவின் கள்ளக்காதல் தாங்கமுடியாமல், அம்மாவையும், “திருமதி செல்வத்தில்” கொடுமைக்கார அண்ணனாக வருபவரையும் குடிசையோடு சேர்த்து எரித்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்லும், கதையோடு ஆரம்பிக்கிறது படம். (அப்படியே திருமதி செல்வம் டைரக்டரையும் அந்த குடிசையில விட்டிருந்தா, நாலு கண்வன்மாருங்க நிம்மதியா கஞ்சிதண்ணி குடிப்பாயங்கண்ணே..) வளர்ந்து இலக்கில்லாமல் செல்லும், விஜய் ஆண்டனி பயணிக்கும் பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாக,, அருகில் அமர்ந்து செல்லும் “சலீம்” என்பவரின் சூட்கேசை எடுத்துக்கொண்டு, சலீமாகவே மாறிப்போகும், விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே, படத்தின் ஒன்லைன்..சாரி..இது, மல்டிப்பிள் லைன்..சரி விடுங்க..ஏதோ ஒரு லைன்..
விஜய் ஆண்டனியா..இதுவெல்லாம் இவருக்குத் தேவையா என்று படம் தொடங்கும்போது இருந்த எண்ணம், படம் முடியும்போது, மொத்தமாக தகர்ந்துபோகிறது..அதற்கு காரணம், அவருடைய கேரக்டரைஷேசன்..முழுவதுமாக, “கொலைகாரன்” என்று வெறுப்பு வரும் பாத்திரமாக காண்பிக்காமல், “புத்திசாலித்தனமான”, அதே நேரத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாக காண்பித்து, விஜய் ஆண்டனிக்கு அருமையான விசிட்டிங்க் கார்டு கொடுத்திருக்கிறார், இயக்குநர் “ஜீவா சங்கர்”. விஜய் ஆண்டனியும் “டேய்..” என்று முதல் படத்திலேயே அருவாள் தூக்காமல், அண்டர்பிளே பண்ணி, அடக்கி வாசித்து, அருமையாக இயல்பாக நடித்திருப்பது, அற்புதம்..குறிப்பாக, நண்பனை எதிர்பாராதவிதமாக கொலை செய்துவிட்டு, கதறும் அந்தக் காட்சியும், ஹீரோயினை நம்ப வைப்பதற்காக, மிமிக்ரி செய்து சண்டை போடும் இடங்களில் எல்லாம், “முதல்படமா” என்று வியக்கவைக்கிறார். ”வெல்கம், விஜய் ஆண்டனி..”..ஆனால் அடுத்த படத்தில் “நானெல்லாம் நடந்தா ரவுண்டு..விட்டா சவுண்டுடா” என்று ஏதாவது பஞ்சு டயலாக்கு ஆரம்பிச்சீங்க..அவ்வளவுதான்..
படத்தில் நடித்திருக்கும், அத்தனை பேரின் நடிப்பும் இயல்பு.குறிப்பாக, விஜய்ய்யின் நண்பராக நடித்திருக்கும், பணக்கார இளைஞனும், எப்போதும், சந்தேக கண்ணோடு பார்க்கும், அந்த இன்ஸ்பெக்டரும், கவர்கிறார்கள். ஹீரோயின்கள் கூட , அழகாகவும், அதே நேரத்தில் நடிக்கவும் செய்திருப்பது, தமிழ்சினிமாவில் நடக்காத அதிசயம்.
ஹீரோயினையும், மற்றவர்களையும் சமாளிக்க, விஜய் ஆண்டனியும் செய்ய்யும் புத்திசாலித்தனமான, காரியங்கள், படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகின்றன. படத்தின் முடிவில் “தொடரும்” என்று போடும்போது, இப்போதுதான், இடைவேளை வருகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார், இயக்குநர் ஜீவா சங்கர்
பொதுவாகவே, நன்றாக இசையமைக்கும்ம், விஜய் ஆண்டனி, சொந்தப்படம் என்றால் கேட்கவா வேண்டும்..பிண்ணனி, இசையிலும், பாடல்களிலும்ம் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக “மக்கயலா, மக்கயலா” என்ற பாடல், இன்னும் கொஞ்ச காலத்திற்கு இளைஞர்களின் தேசியகீதமாக இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நடிப்பிலும், இசையிலும் ஜொலித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கும், சுக்ரதிசை, வீட்டு வாசலில், “பர்கர்” சாப்பிட்டுக்கொண்டு காத்திருப்பது, தெரிகிறது..
வழக்கம்போல, எதையாவது குறை சொல்லாவிட்டால், விமர்சனம் என்று ஏற்று கொள்ளமாட்டீர்கள் என்பதால், படத்தில் அவ்வப்போது காண்பிக்கப்படும், நம்பமுடியாத காட்சிகள், படத்தின் திரையோட்டத்தை கெடுக்காமல் இருப்பதால், நீங்கள் விமர்சனம் என்று ஏற்றுகொள்ளாவிட்டாலும், என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை(எவனுக்காவதும் புரிஞ்சுச்சு…இல்லைல..அப்ப நான்தான் பெரிய விமர்சன பதிவர்..இனிமேலு, என் கையத்தான் லைனுல வந்து எல்லாரும் முத்தம் கொடுக்கணும்..சொல்லிப்புட்டேன்..)
படத்தில் பங்குபெற்றோர் விபரம்
நடிப்பு - பல நடிகர்கள்
ம்யூசிக் - இசையமைப்பாளர்
இயக்கம் - இயக்குநர்
கேமிரா - ஒளிப்பதிவாளர்
நடனம் - நடன இயக்குநர்
சண்டை - ஸ்டண்ட் மாஸ்டர்
எடிட்டிங்க் - படத்தொகுப்பாளர்
தயாரிப்பு - தயாரிப்பாளர்
தியேட்டர் நொறுக்ஸ்
தியேட்டரில், கொடுத்த பாப்கார்னில் மஞ்சள் கலர் கம்மியாக இருந்தது..சூடு இல்லை..என் சீட்டுலிருந்து நாலாவதாக உக்கார்ந்த ஆசாமி, செமயாக தண்ணியடித்து விட்டு, நாலுமுறை எழுந்து ஒன்னுக்கடிக்க போனார். நானும் ஒருமுறை ஒன்னுக்கடிக்க போனேன்..இரண்டு பேர் சிவப்புக் கலர் சட்டை போட்டிருந்தார்கள்
இறுதியாக, விமர்சன பஞ்ச் லைனுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு..
நான் – டீயில் ஊறவைத்த, சுவையான பன்(இல்லாட்டி)
நான் – தெவிட்டாத தேன்(இல்லாட்டி)
நான் – பக்கத்து விட்டு ஜான்(இல்லாட்டி)
நான் – ஓடுறதுல மான்(இல்லாட்டி)
நான் – நேத்து சாப்ப்பிட்ட, ஐஸ் கோன்(இல்லாட்டி)
நான் – வீடு கட்ட கிடைக்கும் லோன்(இல்லாட்டி…)
அடப்போங்கையா….