Sunday 21 August, 2011

நான் எதுக்கு அன்னா ஹசாரேயைக் கவனிக்கணும்

குட்டிப் பாப்பாவுக்கு டைபர் மாத்தணும், அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

பைனல் டெஸ்டினேஷன் – 5 மூவி பார்க்கணும், அன்னா ஹசாரே பற்றி கவனிக்க்க நேரமில்லை..

நண்பன் குழந்தை பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்லணும், அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

வண்டி சர்வீசுக்கு விடணும், அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

பையனுக்கு பேபி வாக்கர் வாங்கனும், நல்ல டீல் கிடைக்குமா..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

கேமிரா ஒன்னு வாங்கனும்.எவ்வளவு இருக்கும்..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

ஆபிஸ் வேலை கொஞ்சம் இருக்கு..மெயில் செக் பண்ணனும்..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

நண்பர் ஒருவரை பார்க்க பீச் ஹோட்டல் செல்லவேண்டும்..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான் வாங்கணும்..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

வீடு அழுக்கா இருக்கு….முழுசா க்ளீன் பண்ணி, ஒழுங்கு பண்ணனும்..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

லைப்ரரில வாங்கிட்டு வந்த 10 டி.வி.டி ரிட்டர்ன் பண்ணனும், அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

வெளியே லஞ்சு சாப்பிடலாம..வீட்டுலேயே சாப்பிட்டு போரடிக்குது..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை..

குடிதண்ணீர் தீர்ந்துடுச்சு..கடைக்கு போய் வாங்கணும்..அன்னா ஹசாரே பற்றி கவனிக்க நேரமில்லை…

ஆமா..எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு,,,நான் எதுக்கு அன்னா ஹசாரேயைக் கவனிக்கணும்..

நண்பன் சொல்லுறான்…”போடா தேசத்துரோகி…”

Sunday 14 August, 2011

என்ன புள்ள செஞ்சே நீ…

சைட் அடிச்சிருக்கியா…இந்த வார்த்தையை யாரிடமாவது கேட்டு பாருங்கள்..கொஞ்சம் வெட்கித்தான் போவார்கள்..”என்னங்க..இதப்போய் எல்லார் முன்னாடியும் கேட்டுகிட்டு..” என்று திருப்பி கேட்பவர்கள் உண்டு..நண்பன் ஒருவனிடம் கேட்டால் சொல்லுவான்..”மச்சி..சைட் அடிக்காதவன் அரை மனிதன்..” சைட் என்பது “பார்வை” என்று பொருள்படும் என்று ஆரம்பித்தால், போயாங்க..என்று எல்லாரும் சைட் அடிக்கப்போய்வுடுவீர்கள் என்று தெரியும்…

சைட் என்ற வார்த்தை எப்போது தொடங்கி இருக்கவேண்டும் என்று கேட்டால், நம் கல்வெட்டுக்களில் இதற்கான அடையாளம் இருந்ததாய் தெரியவில்லை... எனக்கு தெரிந்தவரை, நான் சின்னபிள்ளையாக இருந்தபோதே, இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.”என்ன மாமூ..சைட்டா..”, “வாடா மச்சி, சைட் அடிச்சிட்டு வருவோம்..”, “மச்சான்..அவ என்ன சைட் அடிக்கிறாடா.” கல்லூரி மாணவர்களி பேவரைட் டயலாக்காக இருந்தது “சைட் அடிப்போம்..” என்ற வார்த்தை..என்னிடம் கேட்டால், சைட் அடிக்கத் தெரியாதவன் குருடன் என்பேன்..

எதிரில் அழகான, அல்லது உங்களை கவரக்கூடிய வகையில் ஒரு பெண் நடந்து சென்றால், ஆட்டோமேட்டிக்காக, உங்கள் பார்வை அந்த பெண்ணின் பக்கம் சென்றால், அதுதான் “சைட்..” நன்றாக கவனிக்கவும்.அதோடு நிறுத்திக்கொண்டால்தான் “சைட்…” இதற்கு மேல் சென்று “எக்ஸ்க்யூஸ்மி…வாட் இஸ் டைம் தி நவ்..” என்று ஆரம்பித்தால், அது “சைட்” டின் அடுத்த கட்டம்..கல்யாணம் ஆனவர்கள், இந்த கட்டத்திற்கு செல்லாமல் இருப்பது, உடல், பொருள் ஆவிக்கு நலம்..

என் தமிழ்வாத்தியாரிடம் கேட்டால், “போடா தம்பி…சங்ககாலத்திலேயே, சைட் பத்தி விரிவாக சொல்லியிருக்காங்க” என்பார்..தலைவி நடந்து செல்லும்போது, சைட் அடிக்காத தலைவர்களே இல்லையாம்..புராணத்திலேயே சைட் அடித்துள்ளார்கள் என்றால், நாயர் கடையில் டீயும்,வடையும் அடிக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று, பல பொழுதுகள் வியந்ததுண்டு..

திரைப்படங்களில் சைட்டுகள் இல்லாமல், காதல் படங்களே இருக்காது..காதல் என்பது சைட்டோடுதான் ஆரம்பிக்கும்..நாயகி அடிக்கும் முதல் சைட்டுலேயே, எங்கிருந்து வருமோ தெரியவில்லை, நாயகனுக்கு லவ்வு பிச்சுக்கிட்டு வரும். என்னைக் கவர்ந்த திரைப்படத்தில் வந்த ஒரு சைட், காதலுக்கு மரியாதை படத்தில், ஷாலினி, டாக்குடரு விஜய்யை பார்த்து அடிக்கும் சைட்டுதான்..கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் காதல், இவையெல்லாம் கலந்து ஷாலினி ஒரு பார்வை பார்ப்பாரே…யாத்தே..அந்த நேரம் பார்த்து நம்ம மொட்டை சார், “விழியில் விழுந்து, இதயக்கதவு.” என்று ஒரு ட்யூன் போட, அந்த சைட்டே, அதகளமாக இருக்கும்..

பொதுவாக ஆண்கள் மட்டும்தான் சைட் அடிப்பார்களா..பெண்கள் சைட்டு அடிக்க மாட்டார்களா, என்று கேட்டால், உங்களுக்கு இன்றைக்குதான் பல் முளைத்திருக்கிறது என்று அர்த்தம். பெண்கள் அடித்த சைட்டுகள் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கியதும், அடக்கியதுமாய் பல வரலாறுகள் உண்டு. ராமன் வில்லை உடைக்க நடந்து போன்போது, சீதை அடித்த சைட் பற்றி, ஒரு பெரிய பாடலே உண்டு என்று கூறுவர்…”He is handsome” என்று சிம்பிளாக மேலை நாடுகளில் சொல்லிவிடுவர். ஆனால் அந்த வார்த்தையை சொல்லுவதற்கு, நம் கலாச்சாரம் போட்டுள்ள தடையே, பெண்ணடிமைத்தனம்.”அது என்ன, பொம்பளை தெருவுல நடக்கும்போது, தலை நிமிர்ந்து நடக்குறா..ஒருவேளை கேரக்டரு..” என்று சொன்ன கலாச்சாரத்தில் இருந்து சிறிது, சிறிதாக வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். ஊர்ப்பக்கங்களில், இன்னும் பல திருவிழாக்கள், சைட்டுக்காகவே சிறப்புறுவதுண்டு..

சைட் என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற நிலை மாறி, “சைட் அடிப்பதற்காகவே, பல மால்களும், கபேக்களும்” கட்டப்பட்டு, வெற்றிகரமாக பணம் ஈட்டப்படுகின்றன. ஆனால், சைட் அடித்தலும், ஒரு அளவுக்குதான்.. பார்க்கும் பெண்ணை எல்லாம் சைட் அடித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுப்பாகி, சைட் இல்லாத தெருக்களில் நடக்க பயப்படும், சைட் அடிக்கமுடியாத பஸ்களில் ஏறமுடியாத நிலை ஏற்படும் என்ற பிரபல மனநல மருத்துவர் அவியிங்க ராசா உரைக்கிறார்..

சைட்டோ, கைட்டோ, “அவ அழகாக இருக்கா” என்பதோடு நிறுத்திக்கொள்வதே நலம்..”அவ என்ன பிரா போட்டிருக்கா..அவ சைஸ் என்ன” என்று அடுத்த கட்டத்திற்கு செல்வது, வக்கிரத்தின் வெளிப்பாடே..அப்படி வெளிப்பட்டால், அந்த சைட்டின் அழகே கேவலப்பட்டு, உங்கள் சைட் பறிபோகும் வாய்ப்பு உண்டு…அட..எங்க போறீங்க..சைட் அடிக்கத்தானே…

Wednesday 10 August, 2011

அவியிங்க ராசாவின் அவசரப் பார்வை

இப்போதெல்லாம் முன்பு மாதிரி அடிக்கடி எழுதமுடிவதில்லை. பேஸ்புக்கில் அவ்வப்போது கமெண்டுவதோடு சரி. எழுதி, என்னத்தை கண்டோம் என்ற அலுப்பு கூட இருக்கலாம். அல்லது கற்பனை வறட்சியாக கூட இருக்கலாம்.

அந்த விஷயத்தில் நடிகர் அஜீத்தின் தற்போதைய ஸ்டேட்மெண்ட் எனக்கு பிடித்திருக்கிறது. நடிகனை, நடிகனா பாருங்கடா என்று செவிட்டில் அறைந்தாற்போல சொன்னதுபோல இருக்கிறது. இதைதான், நானும் காலங்காலமாக சொல்லி வந்து நிறைய கெட்டவார்த்தை கமெண்டுகளும் வாங்கி ஓய்ந்து போய்விட்டேன். ரஜினி, அஜீத் படம் பிடிக்கிறதா, நன்றாக அவருடைய படத்தை பார். கைதட்டு, சந்தோசப்படு..அதோடு நிறுத்திக்கொண்டு வந்து வேலையை பார். உனக்கும் குடும்பம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டு, கட் அவுட்டுக்கு பால் ஊத்துவது, லவுட்ஸ்பீக்கரை கட்டிக்கொண்டு, காதை டேமெஜ் பண்ணுவது, “தலைவா, தமிழக விடிவெள்ளியே” என்று போஸ்டர் அடிப்பது, நடிகர் செல்லும் இடத்திற்கெல்லாம், கொடியை பிடித்துக்கொண்டு செல்வது, நடிகன் படம் வருவதற்கு முன்னாடியே பித்துபிடித்த மாதிரி அலைவது…இவை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஒருபோதும் உதவியாக இருக்கப்போவதில்லை. நடிப்பு என்பது ஒரு தொழில். நடிகன் ஒன்றும் சமூகசேவைக்கு படத்தில் நடிக்கவில்லை. கோடி, கோடியாக சம்பளம் வாங்குகிறான். நடிக்கிறான். அவன் ஒன்றும் “என் ரசிகர்களே” என்று உருகுவதில்லை. வீட்டை மறந்து ரசிகர்களோடு தெருவில் இறங்கி போராடுவதில்லை,,ரசிகனுக்கு ஒன்றென்றால், பதறிப்போவதில்லை. அவனுக்கும் குடும்பம் குட்டி என்று தெளிவாகத்தான் இருக்கிறான். ரசிகர்களாகிய நாம்தான் இந்த அக்கப்போர் பண்ணி, வீட்டையும், நாட்டையும் தொல்லைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். “அட உனக்கு என்னடா வந்தது, நாங்கள் அலும்பு பண்ணினால்” என்று கேட்டால் சொல்லுவேன்…”அடப்பாவமே..ஒரு தலைமுறையே கெடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் தெரியுமா…ஒரு வீட்டில் உக்கார்ந்து நீங்கள் இதையெல்லாம பண்ணினால் யார் கேட்கப்போகிறார்கள்..தெருவில், வீதியில் இறங்கி செய்வதால் தானே இவ்வளவு பிரச்சனை..உன்னை பார்த்து, பள்ளி செல்லும் மாணவன் கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறான். ரசிகர் மன்றத்தில் சேர்கிறான். படிப்பை மறந்து “தலைவா” என்று கத்துகிறான்..”. அவனைப்பார்த்து சிலபேர், இன்னும் சிலபேர், இன்னும் சிலபேர் என்று ஒரு தலைமுறையே அல்லவா, கெடுத்துக்கொண்டிருக்கிறோம். சத்தியமாக சொல்லுகிறேன்..”தலைவா” என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகிறேன்.

ரசிகன் மட்டும்தானா..நன்றாக படித்த, பலபேரும் இதைதான் செய்துகொண்டிருக்கிறோம்..ஒரு எழுத்தாளருடைய , அல்லது பதிவருடைய எழுத்து பிடிக்கிறதா..சந்தோசப்படு, கொண்டாடு.முடிந்தால் தினமும் கூட அவருடைய எழுத்துக்களை படி..அதைவிட்டுவிட்டு “ஐய்யயோ..நீங்கள் எழுதாமல் சோறு தண்ணியே இறங்குவதில்லை…”, “உங்களை பார்க்கணும்போல ஆசையாக உள்ளது.. சொல்லுங்க..என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு வருகிறேன்..ஒன்னா சேர்ந்து தண்ணி அடிக்கலாம்..” என்பதும், அப்புறம் காசு செலவழித்து தண்ணி அடித்துவிட்டு, அதை பெருமையாக “அவருடன் நான்” என்று படம் காட்டுவதும், “அவரை பார்த்தபோது தெய்வத்தை பார்த்தது போல இருந்தது, நாக்கு ஒட்டிக்கொண்டது” என்று புளகாங்கிதம் அடைந்து பேஸ்புக்கில் கமெண்டு போடுவதும், அவருடைய அக்கவுண்டு நம்பரை பார்த்ததும், கஷ்டப்பட்டு சேர்த்த காசை, பைனான்ஸ் கம்பெனியில் போட்ட மாதிரி அப்படியே, அவருடைய அக்கவுண்டில் போடுவதும்….அவர் என்னதன தப்பு செய்தாலும் “அய்யோ..அவர் அப்பாவி” என்று வக்காலத்து வாங்குவதும்…அடப்பாவமே..எழுத்தை காட்டி மயக்கி உன்னை வைத்து, ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறதே…முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். எழுதுவதால் நான் ஒன்றும் கடவுள் அல்ல..என் எழுத்துக்கள் எல்லாம் என் எண்ணங்கள் அல்ல…மனம் முழுதும் அழுக்கை வைத்துக்கொண்டு நான் யோக்கியன் மாதிரி கூட எழுதலாம்…எழுத்துக்களை ரசிக்கவேண்டுமே அன்றி எழுத்தாளனையோ, பதிவனையோ அல்ல..அதனால் தான், எனக்கு வந்த வாசகர் கடிதம் என்று பதிவை பார்க்கும்போதும் எரிச்சல் வருகிறது..அது பொறாமையால் அல்ல…ஆற்றாமையால்.

சமச்சீர் கல்வியில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் குட்டுபட்டிருக்கிறது. இதை ஒழுங்காக அப்போதே நடைமுறை படித்தி இருந்தால், இந்த அலைச்சல் இருந்திருக்காது, மாணவர்களுக்குதான் எவ்வளவு கஷ்டம்..இனி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட பள்ளிக்கு வரவேண்டியிருக்கும்.ப்ச்..

சாப்ட்வேர் கம்பெனிகள் வேலை பார்க்கும் நண்பர்கள் ரெடியாகிக்கொள்ளுங்கள்…அமெரிக்க பொருளாதாரத்திற்கு கொஞ்சம் கெட்டகாலம். இன்னொரு ரெஷசன் ரெடியாகி கொண்டிருக்கிறது..கல்யாணம் செய்யாதவர்கள்..நாளைக்கே திருமணம் செய்வது நலம்.இன்னும் கொஞ்சநாள் போனால் ஒரு பய பொண்ணு கொடுக்க மாட்டான்..

பதிவர்களில் எனக்கு கேபிள் சங்கர் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். போலித்தனம் இல்லாமல் இயல்பாக இருக்கும்..எனக்கு பாருடா எத்தனை வாசகர்கள் என்று அலும்பி கொள்ளவே மாட்டார்..என்னதான் கிண்டல் செய்தாலும், நேரில் பார்த்தால், "என்ன தலைவா" என்பார்..சற்று லேட்டாக இருந்தாலும், அவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

(இன்னும் எழுதுவேன்…)