Sunday 27 March, 2011

என்னை மன்னிச்சிருடா

கெஞ்சல் தொணியில் கேட்டேன். நான் இதுவரை யாரிடம் இப்படி கெஞ்சியதில்லை. ஆனால், என் உயிர் நண்பனிடம் இப்படி கேட்டதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அவனுக்கும் எனக்கு நடந்த வாக்குவாதம் வாய்மீறவே, கோபமான வார்த்தைகள் பரிமாறப்பட, தேவையில்லாத வார்த்தைகள், என்னிடமிருந்த வந்தன. அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. ஒருநிமிடம் அதிர்ந்தவன், ஒன்றும் பேசாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

கோபம்தான் எவ்வளவு பெரியவியாதி. இந்த உலகத்தில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும், கோபம்தான் முதல்படி. கோபம்தானே அத்தனைக்கும் காரணகர்த்தா. ஒருநிமிட கோபத்தில் சுயஉணர்வு இழந்து, கொலை செய்து, இன்றும் வீடிழந்து, குடும்பம் இழந்து , சிறையில் கஷ்டப்படுவர்களிடம் கேட்டு பாருங்கள், இன்னமும் சொல்வார்கள்..”சே..அந்த ஒருநிமிட கோபத்தை கட்டுப்படுத்தியிருந்தா, இந்த நிலைமைக்கு ஆயிருப்பேனா சார்..”

அந்த கோபம்தான் அன்றும் எனக்கு வந்தது. உணர்வுகளுக்கு அடிமையாகிப்போனவன் தானே மனிதன். நானும், மனிதன் என்று நீருபித்தது, அந்த கோபம். கோபத்திற்கு அடுத்தபடி, வார்த்தைகள். பெரியவர்களை கேட்டு பாருங்கள், சொல்வார்கள்..”வார்த்தைகளுக்கு வலிமை உண்டு..” அதனால்தான், பேசும்போது, அளந்து, அளப்பரிந்து பேசவேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் கோபம்தான் அனைத்தையும் மறக்கடித்து விடுமே, அளந்தாவாது, அளப்பரிந்தாவது..சடசடவென்று கொட்டியது, இனி அள்ளமுடியாது என்று தெரிந்தும்.

என்னால் சாப்பிடமுடியவில்லை. அவனுக்கு என்ன சமாதானம் சொல்லுவதென்றும் தெரியவில்லை. ஆற்றமாட்டாமல் அவனை செல்பேசியில் அழைத்தேன். எப்போது தொலைபேசினாலும் முதல் மணி அழைப்பிலே “சொல்லுடா” என்று நட்போடு சொல்பவன், இன்று முழு மணி அழைப்பிற்கு பின்பும் எடுக்கவில்லை. விடாது தொடர்ந்து முயற்சித்தேன். ம்..ஹீம்..எடுக்கவில்லை. சரி. எஸ்.எம்.எஸ் அனுப்ப்பலாமென்று, நினைத்து “என்னை மன்னிச்சிருடா..” என்று அனுப்பியும் பதில் ஏதுமில்லை.

ஒன்று, இரண்டு..என்று ஔவையார் பாடியதுபோல், 20 எஸ்.எம்.ஸூக்கள் ஆகின. அனைத்தும் ஒரே சேதியை சொல்லியன “சாரிடா..என்னை மன்னிச்சிருடா..” சுவற்றில் எறிந்த பந்தாக அனைத்தும் திரும்பிவந்தன. எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை. உறங்க பிடிக்கவில்லை. எதுவும் பிடிக்கவில்லை. பைத்தியமாகிப்போனேன்..நட்புக்கு என்ன அவ்வளவு வலிமை. அத்தனையும் மறக்கடித்துவிடுகிறதே…

ஹாலில் கிடந்த இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிப்போனேன். காலையில் எழுந்தவுடன், மனைவி அருகில், கவலையாய் அமர்ந்திருந்தாள்..

“என்னங்க..என்ன ஆச்சு..”

“ப்ச்..மனசு சரியில்லை..விடு..”

“நேத்து ஒன்னுமே சாப்பிடலை…சேர்லயே தூங்கிட்டீங்க.யார்கூடவும் பேசமாட்டுறீங்க.. என்ன ஆச்சு..எதுவும் பிரச்சனையா..”

“மனசு சரியில்லைன்னு சொல்லுறேன்ல..இப்ப விடுறியா..” கத்தினேன்..மறுபடியும் கோபம். ஆனால் இந்தமுறை வார்த்தைகளில் நிதானித்தேன்.

மனைவி, என் மனம் அறிந்தவள். அமைதியாக எழுந்து போனாள். தேநீர் கொடுத்துவிட்டு அவள்வேலைகளில் இயல்பானாள். அவ்வப்போது என்னை ஓரக்கண்ணால், “நன்றாக இருக்கிறானா..” என்று பார்த்தபடி..எனக்கு கஷ்டமாக இருந்தது..அவளை கூப்பிட்டேன்..

“தப்பு பண்ணிட்டேன்..”

“என்ன ஆச்சுங்க..” என்றாள் தலைகோதியபடி..ஆறுதலாக..

“நான் அவனை அப்படி பேசியிருக்ககூடாது..எவ்வளவு கடுமையா நடந்துகிட்டேன்..”

அப்படியே நடந்ததை ஒப்பித்தேன்..ஒரு நிமிடம் யோசித்தவள் ஒன்றும் பேசவில்லை. எழுந்து சமையலறை சென்றாள்.. எனக்கு ஆச்சர்யம். ஆறுதல் சொல்வாள் என்று எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி..அவள் பின்னால் சென்று கேட்டேன்..

“என்ன நான் செஞ்சது தப்புதானே..நீ என்ன சொல்லுற..”

“ப்ச்..” மௌனமானாள்..

“இப்படி ஒன்னும் சொல்லாமல் இருந்தால் எப்படி…சொல்லு..நான் செஞ்சது தப்புதானே..”

ஒரு சின்ன பெருமூச்சுக்கு அடுத்து நிதானமாக சொன்னாள்..

“நீங்க இதுவரைக்கும், மனிதர்களிடம்தான் நட்புவைத்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்..”

எனக்கு திரும்பவும் கோபம் வந்தது..

“நான் செஞ்ச தப்புக்கு என் நண்பனை ஏண்டி மனிதன் இல்லைன்னு சொல்லுற..”

“பின்ன மனுசனா..”

“திரும்ப, திரும்ப என்னை கோபமூட்டுறே..எனக்கு விளக்கம் சொல்லு..ஏன் அப்படி சொன்ன..”

நிதானித்து சொன்னாள்..

“மன்னிப்பு கேட்பவன் மனிதன். மன்னிக்கிறவன் கடவுள்..உங்கள் நண்பன், கடவுளாக வேண்டாம்..முதலில் மனிதனாகட்டும்..அதற்கு பின் நண்பனா என்று விவாதிப்போம்..”

சொல்லிவிட்டு அவள்வேலையில் பிசியாகிப்போனாள்..ஏனோ அந்த வார்த்தைகள் என்னிடம் பலகேள்விகளை எழுபபியது. மெல்ல, மெல்ல எழுந்து என் அறைக்கு வந்தேன். செல்பேசி மணி அழைக்கவே, நிதானமாக எடுத்தேன்..

“நண்பன் காலிங்க்” என்று இருந்தது

5 comments:

Senthil said...

touching!!!!!!!!!

senthil,doha

DR said...

தப்பு பன்னது இவராக இருக்கும் பட்சத்தில் இவரோட நண்பர் எப்படி இவரிடம் மன்னிப்பு கேட்பார் ?

ஒண்ணுமே புரியலையே... !!!

taaru said...

வழக்கம் போலேனு சொல்ல மாட்டேன்... கொஞ்சம் வித்யாசப்படுது...இந்த வாட்டி அழகான நட்பு அண்ட் அன்பான சிக்கல்கள். பளிச்சுன்னு இருந்தது பாசு.

அவிய்ங்க ராசா said...

நன்றி செந்தில்,
தனுசு..எத்தனை இவர்..எனக்கே குழம்புது..)))
நன்றி தாரு..

DR said...

@அவிய்ங்க சரி விடுங்க...

Post a Comment