Monday 10 October, 2011

அக்ரஹாரத்து வீட்டு நண்பன்



(முன் குறிப்பு – இந்தப் பதிவு, எந்த சமூகத்தையும், இழிவுப்படுத்துற்காகவோ, தூக்கிப் பிடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவு செய்வதே நோக்கம்)

சமீபத்தில் கடைக்கு செல்லும்போது, சிறுவயதில் என்னுடன் படித்த பள்ளிக்கூட நண்பனைப் பார்த்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இரண்டு வருடங்கள் தான் இருக்கும் அவனுடன் என்னுடைய நட்பு. என்னை பார்த்தவுடன், அவனும் மிகவும் சந்தோசப்பட்டான்..

அவன், அவனுடைய மனைவி, குழந்தை..எல்லாரையும் அறிமுகம் செய்துவைத்தான்..

“இங்க வந்து, 6 மாசம் தான் ஆச்சு..எல்லாமே புதுசா இருக்கு ராசா..”

“அதெல்லாம் போகப்போக பழகிடும்..கவலைப்படாதே..”

“சரி..வீட்டுக்கு வா…அம்மாவும் வந்திருக்காங்க..”

எனக்கு கொஞ்சம் தயக்கம்.

“இல்லடா..அது வந்து..”

“அதெல்லாம் ஒன்னுமில்ல..நீ வர்ற” என்றான் உரிமையாக..தயக்கத்திற்கு காரணம் நண்பனுடைய அம்மா..

நான் பத்தாவது படிக்கும்போதுதான் அவன் எனக்கு அறிமுகமானான். மிகவும் இயல்பாகவும், நட்பாகவும் பழகுவான். ஒருநாள் வீட்டிற்கு க்ரூப்ஸடடிக்கு அழைத்திருந்தான்..அவனுடய தெரு அக்ரஹாரம் என்றவுடன் தான், அவன் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.

எங்கள் ஊரில், தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, சாதி கண்டிப்பாக இருக்கும்..ஒவ்வொரு தெருவுக்கும், சாதி பெயர்தான். “செட்டியார் தெரு..முதலியார் தெரு..அகமுடையார் தெரு..” என்று. ஒவ்வொரு தெருவிலும் 100% அந்த சமூகத்துமக்கள் தான் வாழ்வார்கள். அடுத்த சமூகத்திற்கு, மறந்தும் வீடு கொடுப்பது கிடையாது. பொங்கல் திருவிழா என்றால், ஒவ்வொரு தெருவிலும் உள்ள அண்டுசிண்டுகள் தொல்லை தாங்கமுடியாது. “எங்க சாதிக்காராய்ங்க” என்று பெருமை வேறு.

அக்ரஹாரம் என்பது, எங்கள் ஊருக்கு நடுவில் இருக்கும். மிகவும் அமைதியாக இருக்கும். கோலி, பம்பரம், கிட்டிப்புல் என்று எதுவும் பார்க்கமுடியாது. சிலநேரங்களில் “ஸ்ரீராம்”, “விக்னேஷ்”, “முரளி” என்று பெயர்கொண்ட சிறுவர்கள் மட்டும், கிரிக்கெட் விளையாடுவதுண்டு. ஆனால் வீடு ஒவ்வொன்றும் படு நீநீநீளமாக இருக்கும். நீளத்தை பார்ப்பதற்கென்றே, நாங்கள், வீட்டுக்குள் எட்டிப்பார்ப்போம். கண்டிப்பாக வீட்டில் ஒரு மகனாவது, மருமகனாவது, அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். வீட்டிற்கு முன் பெரிய திண்ணை இருக்கும். முக்காடு போட்டு கொண்டு, காலை நீட்டிக்கொண்டு, கண்டிப்பாக ஒரு பாட்டி உக்கார்ந்து ஏதாவது பாக்கு மென்றுகொண்டிருக்கும். போவோர் வருவோர்களை, கண்ணாடியை தூக்கி பார்க்கும் அழகே தனி..எல்லார் வீட்டிலேயும், கண்டிப்பாக சங்கராச்சாரியார் புகைப்படம் இருக்கும். பூஜை அறை இல்லாமல் வீடே இல்லை. வெளிப்பக்கத்தில் ஒரு துளசி மாடம்.  

மேற்கூறியவை மட்டுமே, அந்த வயதில் அக்ரஹாரத்தை பற்றிய என்னுடைய புரிதலாக இருந்தது. ஆனாலும், எப்படியாவது, ஒரு வீட்டுக்குள் புகுந்து பார்த்துவிடவேண்டும் என்று அவா எனக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. மிகுந்த ஆவலோடு, காலை 9 மணிக்கு அவன் வீடு சென்றேன். வெளியே நின்று அவன் பெயரை சொல்லி கூப்பிட்டேன்..சற்றுநேரம் கழித்து, ஒரு அம்மா எட்டி பார்த்தார்கள். அவர்களுக்கு நடுவயது இருக்கும். அவர்கள் முகத்தில் ஒரு சின்ன குழப்பம்..

“என்னப்பா, என்ன வேணும்..”
“விக்னேஷ் இருக்கானா…அவன் வரச்சொல்லியிருந்தான்..”

சற்றுநேரம் யோசித்தார்கள்..

“செத்த நாழி இருப்பா..விக்னேஷ்..விக்னேஷ்..பிரண்டு வந்திருக்கான் பாரு…”

நண்பன் வந்தான்..

“வாடா ராசா…உள்ளார வா..” என்றான்..உள்ளே நுழைய எத்தனிக்கவே, அம்மா கேட்டார்கள்

“ஒரு நிமிஷம்பா…எந்த தெரு..”

சொன்னேன்..எனக்கு அப்போது, அதன் அர்த்தம் தெரியவில்லை..அவர் முகம் சற்று மாறியது…

“அப்படி திண்ணையில உக்காருப்பா..” என்று சொன்னவர்கள், விக்னேஷை அழைத்து உள்ளே சென்றார்கள், சலசலவென்று சிறு பேச்சு சத்தம்..எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படியாவது ஒரு ஐயர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது.,.விக்னேஷ் கண்ணீரோடு வெளியே வந்தான்…

“ராசா..வா..இன்னைக்கு வெளியே போய் படிக்கலாம்..”

எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது…

“ஏண்டா…”

“அது..அது..வந்து…பாட்டிக்கு உடம்புக்கு முடியல..அதனால..”

“அதனால என்ன…நானும் பாட்டியை பார்க்குறேண்டா..” என்றேன் வெள்ளந்தியாய்..

“ப்ச்..இல்லடா..நீ வேற சாதியில்ல…அதனால் தான் அம்மா யோசிக்குறாங்க” …தயங்கி தயங்கி சொன்னான்..முழுதாக காற்று நிரம்பிய பலுனை, ஊசிவைத்து உடைத்தமாதிரி இருந்தது. கடைசி வரைக்கும் ஒரு ஐயர் வீட்டுக்குள் நுழைய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்தது..

“சரி..தாகமா இருக்கு..கொஞ்சம் தண்ணியாவது…” என்றேன்

வீட்டிற்குள் சென்றவன் வர ரொம்ப நேரம் ஆனது..சிறிதுநேரம் கழித்து வந்தவன் கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் குவளை..அவர்கள் வீட்டு நாய்க்கு வைக்கும் குவளை போல இருந்தது..என்னால் தாங்க முடியவில்லை..

“ஏண்டா..” என்றேன்..
“இல்லடா..பாட்டி தான்…நீ வாடா உனக்கு வெளியே ஏதாவது வாங்கி தர்றேன்…”

என்னால் தாங்கமுடியவில்லை..அந்த இடத்தை விட்டு ஓட்டமாக ஓடினேன்..ஓடினேன்…ஓடினேன்..விடு வந்துதான் நின்றேன்..அம்மா சமையல் செய்து கொண்டு இருந்தார்கள்..ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன்…அப்படியே அணைத்துக்கொண்டார்கள்..
“யம்மா…”

“ஏம்பா..எம்புள்ள ஏன் அழுவுது..யாராவது அடிச்சாய்ங்களா..

“இல்லம்மா..விக்னேஷ் வீட்டுக்கு போனேன்மா..உள்ள விடமாட்டுங்குறாய்ங்க” என்று விசும்பி,விசும்பி அழுதேன்…

கண்ணீரை துடைத்துவிட்டார்கள்..

“நீ ஏம்பா, அங்கெல்லாம் போறீங்க..”

“அவந்தான்மா கூப்பிட்டான்..”

“அவிங்கள்ளாம் உசந்த சாதிப்பா..அவிங்க வீட்டுக்குள்ளார விடமாட்டாய்ங்க..”

“ஏம்மா..நாமளும் உசந்த சாதிதான்னு சொன்னே..”

“இல்லப்பா..நம்மளை விட அவிங்க இன்னமும் மேல..”

என்றார்கள். என்னால் எந்த சமாதானத்தையும் ஏற்று கொள்ளமுடியவில்லை..அந்த வயதில் அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை. ஆனாலும் விக்னேஷ்ஷிடம் இதை சற்றும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் விக்னேஷ் எனக்கு முழுமையான நண்பான இருந்தான். அதற்கப்புறம், கல்லூரியிலும், வேலை செய்யும் இடத்திலும், எனக்கு நிறைய அய்யங்கார் நண்பர்கள்..எல்லாரும் என்மேல் மிகவும் நட்பாக இருந்தார்கள்.. எந்த வேறுபாடும் பார்க்கவில்லை..நான் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தில் சாப்பிட்டார்கள்..நான் குடித்த கூல்டிரிங்க்ஸை வாங்கி குடித்தார்கள்…

காலம் எல்லாவற்றையும் மாற்றி இருந்தது…படித்தது வேலைக்கு சென்று அமெரிக்கா வரும்வரை விக்னேஷை பார்க்கமுடியவில்லை. இதோ, இன்று, வேறு தேசத்தில் விக்னேஷ்..தயங்கி, தயங்கி உள்ளே சென்றேன்..

அதே அம்மா..மிகவும் வயதாக…ஆனால் முகத்தில் எந்தவித சலனத்தையும் பார்க்கமுடியவில்லை..விழுந்து, விழுந்து கவனித்தார்கள்..சிலநேரங்களில் என் அம்மாவை பார்ப்பது போல இருந்தது…எனக்கு ஐயர் வீடுகளில் பிடித்த, வத்தகுழம்பு, சுட்ட அப்பளம் வந்தது..சுடசுட பில்டர் காபி…வெளுத்து வாங்கினேன்..கிளம்பும் வரைக்கும் அதே சிரிப்பு..யப்பா..காலம்தான் எவ்வளவு மாறியிருக்கிறது..மாற்றியிருக்கிறது..

எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு காரைக்கிளப்ப எத்தனித்தபோது,,வீட்டிலிருந்து அம்மா ஓடிவருவதை கண்டேன்..கார் கண்ணாடியை கீழே இறக்கினேன்..

“ராஜா..”

“என்னம்மா…”

“ஊருக்கு வந்தா கண்டிப்பா, அக்ரஹாரத்துக்கு வீட்டுக்கு வாப்பா”

இந்த முறை கண்டிப்பாக செல்லவேண்டும்.

12 comments:

அமுதா கிருஷ்ணா said...

எப்படி தான் அப்படி நடந்து கொள்ள முடிந்ததோ.படித்த முட்டாள்கள் நிறைய பேர் இருந்து உள்ளார்கள்.மனிதனில் என்ன வேற்றுமை கண்டார்களோ???

Thuvarakan said...

wow super anna........

dondu(#11168674346665545885) said...

//“ஏம்மா..நாமளும் உசந்த சாதிதான்னு சொன்னே..”

“இல்லப்பா..நம்மளை விட அவிங்க இன்னமும் மேல..”//

உங்களைவிட கீழ்மட்டத்தில் இருப்பதாகக் கருதப்படும் சாதி பையன் யாரையாவது நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழைத்து வந்த அனுபவம் ஏதும் இல்லையா? அவ்வாறு செய்திருந்தால், உங்கள் வீட்டில் அதற்கு எவ்வாறு ரியேக்ட் செய்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அவிய்ங்க ராசா said...

நன்றி அமுதா
நன்றி துவாகரன்
நன்றி டோண்டு சார்..,எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் ஏற்படவில்லை. ஏற்பட்டால் கண்டிப்பாக எழுதுகிறேன்...

Anony Munna said...

Even if I hate Dondu for showing off his jaathi, it still is an interesting question. I can see that you tactfully evaded answering it. No worries we all do the same :)

Eesan said...

This is not true. No Iyengar will have the name "Vignesh". Kathai eztharathukku munnala nalla homework pannu appu. Ippadi maatikathey.

அவிய்ங்க ராசா said...

நன்றி முன்னா...
ஈசன்..உண்மை சம்பவத்தை எழுதும்போது, பெயரை எழுதக்கூடாது என்பதே அடிப்படை. மற்றபடி, விகனேஷ், ஐயரா, ஐயங்கார என்பது இந்த இடத்திற்கு பொருந்தாத ஒன்று...

dondu(#11168674346665545885) said...

//நன்றி டோண்டு சார்..,எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் ஏற்படவில்லை. ஏற்பட்டால் கண்டிப்பாக எழுதுகிறேன்...//
என்ன அனுபவம் இல்லை?
1. அம்மாதிரி சாதிப் பையன்கள் உங்கள் நண்பர்களில் இல்லை. (அல்லது)
2. அப்படியே இருந்தாலும் நீங்கள் அவர்களை உங்கல் வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆம் என்றால் ஏன்? (அல்லது)
3. உங்கள் வீட்டில் அம்மாதிரி சாதியினர பற்றி பேசியதே இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அவிய்ங்க ராசா said...

டோண்டு சார்..

எனக்கு அப்படி நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை..
அதனால் எந்தவொரு அனுபவமும் ஏற்பட்டதில்லை..

Santhose said...

//1. அம்மாதிரி சாதிப் பையன்கள் உங்கள் நண்பர்களில் இல்லை. (அல்லது)
2. அப்படியே இருந்தாலும் நீங்கள் அவர்களை உங்கல் வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆம் என்றால் ஏன்? (அல்லது)
3. உங்கள் வீட்டில் அம்மாதிரி சாதியினர பற்றி பேசியதே இல்லையா? //

That's Dondu !!!!. Unmai Sudum.

Eesan said...

Rasa,

Nalla Samaligringa. Innumore Santhegam. Ungal Nabar our Iyengar. Iyengararukku "Jeeyar"than Guru, Sankarachariyar illai. This is a story. You have written this because you don't like Brahmins. Better luck next time for a good story. Ellorukkum Manasatchi irukkirathu.

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Eesan said...
Rasa,

Nalla Samaligringa. Innumore Santhegam. Ungal Nabar our Iyengar. Iyengararukku "Jeeyar"than Guru, Sankarachariyar illai. This is a story. You have written this because you don't like Brahmins. Better luck next time for a good story. Ellorukkum Manasatchi irukkirathu.
21 October 2011 8:44 AM
//////////////////////////////
ஐயா ஈசன்..பதிவை சரியாக படிக்கவில்லையா..எந்த இடத்தில் என் நண்பன் வீட்டில் சங்கராச்சாரியார் படம் இருந்தது என்று சொல்லிருக்கிறேன்..அக்ராஹாரத்து வீடுகளில் என்று தான் சொல்லியிருக்கிறேன்..சரி அப்படியே நணபன் வீடு என்றே வைத்துக்கொள்ளுங்கள்..சங்கராச்சாரியாரை வைத்துக்கொள்ளகூடாது என்று சட்டம் உள்ளதா என்ன..என்னிடம் எந்த துவேசமும் இல்லை..வேறு ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமானால் டிரை பண்ணுங்கள்...

Post a Comment