Thursday 25 April, 2013

கமல்ஹாசன் முத்தமும், கோவாலு கோபமும்



இரண்டு மாசமா கோவாலு கண்ணில மாட்டாம தப்பிச்சிக்கிட்டு இருந்தேன்..இன்னைக்கு முடியல..என் கிரகம் அன்னைக்கு குத்தவைச்சு கோலி ஆடிடுச்சு போல..

அமைதியா ஒன்னுக்கடிச்சுகிட்டு இருக்குறப்பத்தான் அவனைப் பார்க்கணுமா..

"டேய்...ராசா...."

"அய்யோ..கோவாலு.."

"என்னது "அய்யோ" வா.."

"இல்லடா கோவாலு..இது அந்த "அய்யோ..." இல்லை..அந்த "அய்யோ..."

"ஓ..அந்த "அய்யோவா.." நான் கூட அந்த "அய்யோ" ன்னு  நினைச்சுட்டேன்.."

"அய்யோ..அய்யோ.."

"சரி..கோவாலு..அது ஏண்டா வில்லங்கமான நேரத்துல வர்ற..."

"அதவிடுடா.."

"இப்பத்தாண்டா ஆரம்பிச்சுருக்கேன்..விட்டா பேண்ட் நாசமாகிரும்டா.."

"டே ராசா..நான் கொலைவெறியில இருக்கேன்..கடுப்பை கிளப்பதா.."

நான் ஏனுன்னு கேட்பேன் நினைக்கிறீங்க..மாட்டேனே..மாட்டவே மாட்டேன்..இது மாதிரி ஏனுன்னு கேட்டு, கொலைவழக்கு தவிர மத்த பிரச்சனை எல்லாத்துலயும் மாட்டிருக்கேன்..ஆனாலும் அவன் விடமாட்டான்..

"ராசா..என்ன இருந்தாலும் கமலு அப்படி பண்ணியிருக்க கூடாதுடா.."

"அப்படி என்ன பண்ணுனாரு.."

"முத்தம் கொடுத்துட்டாரு.."

"டே..கோவாலு..அவரு முத்தம் கொடுக்காம இருந்தாத்தானடா நீ ஆச்சர்யப்படணும்..அவருதான் முத்த ..இது..உலகநாயகனச்சே.."

"ராசா...படத்துல கூட பரவாயில்லை..ஆனா..பொதுஇடத்துல வைச்சு..

"டே  கோவாலு..விளக்கமா சொல்லு.."

"அதாவது ராசா..நம்மளையெல்லாம் கோடிஸ்வரனா ஆக்கித்தீரணும்னே ஒரு நிகழ்ச்சி வைச்சிருக்காய்ங்கள்ள.."

"ஆமா..எட்டுக்காலு பூச்சிக்கு எத்தனை கால்..அப்படின்னு அறிவூபூர்மா கேட்டு அன்னைக்கு புல்லா சிந்திக்க விட்டாய்ங்களே..அவிங்கதான..ஆமா..எட்டுக்காலு பூச்சிக்கு எட்டுகாலுதான.."

"டே..மேட்டரு அதில்லை..அந்த நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் சும்மா இருக்காம நம்ம ஆங்கர் திவ்யதர்சினிக்கு பச்சக்..பச்சக்குன்னு முத்தம் கொடுத்துட்டாருடா.."

"அடங்கொன்னியா..திவ்யதர்சினி என்னடா பண்ணுச்சு..போலீசுல கீலீசுல கம்ப்ளெயின் பண்ணிடுச்சா..அய்யோ..கமலுக்கு என்ன ஆச்சு..ஊரை விட்டு போயிருவேன்னு திரும்ப பேட்டி கொடுப்பாரே..உடனே வீட்டை வித்து பத்திரத்தை அனுப்பணும்..என்னைவிடு உடனே போய் வீட்டை விக்கணும்.."

"டே ராசா..முத்தம் கேட்டதே திவ்யதர்சினிதாண்டா..."

"அய்யோ..அப்படியா...ஆஹா..சரி..அதுக்கு ஏண்டா நீ கோவமாகுற..கமலுக்கு 55 வயசு இருக்கும்..ஒரு அப்பா ஸ்தானத்துல முத்தம் கேட்டதுல என்ன தப்பு.."

"டே ராசா..என்னடா இப்படி சொல்லிட்ட..நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கு என்ன ஆவுறது..ஓ மை காட்..அவர் டமிழ் கலாச்சாரம் இஸ் ஸ்பாயில்டு.."

"தக்காளி..அத கூட ஓட்டை இங்கிலீசுல சொல்லிட்டு தமிழ் கலாச்சாரமா..சரி..தமிழ் கலாச்சாரம்னா என்ன சொல்லு.."

"அது..அது வந்து..தமிழுக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்குல.."

"சரி..இருக்கு,,அதுதான் என்னன்னு சொல்லு முதல்ல..."

"அது வந்து..இந்த மாதிரி முத்தம் கொடுத்தா..அதைப் பார்க்குறவ்யிங்க மனசு கெட்டுபோகாதா.."

"ங்கொய்யால..மனசுதான..நல்லா நைட்டு பன்னிரெண்டு மணிக்கு அலாரம்வைச்சு, சூர்யா டிவில மலையாளப்படம் பார்த்தவந்தானே..அப்பெல்லாம் மனசு தங்கம் மாதி இருந்துச்சோ..."

"அதெல்லாம் தெரியாது..அவரு எப்படிடா முத்தம் கொடுக்கலாம்..கட்டிப்பிடிக்கலாம்.."

"சரி..டூயட் பாட்டுங்குற பேருல தமிழ்சினிமாவில என்னென்ன பண்ணுறாய்ங்க..அப்பெல்லாம் தமிழ்கலாச்சாரம் கெடாதோ.."

"அதெல்லாம் தெரியாது..தமிழ் கலாச்சாரம்.."

"கோவாலு..திரும்ப, திரும்ப தமிழ் கலாச்சாரமுன்னு சொல்லிறியே..தயவுசெஞ்சு அது என்னதான் சொல்லுடா முதல்ல..."

அப்படின்னேன்..பயபுள்ள கொலைவெறியா பார்க்குறான்..ஆனா பதிலு சொல்ல மாட்டீங்குறான்..

கோவாலை விடுங்கண்ணே..நீங்க சொல்லுங்க..தமிழ் கலாச்சாரமுன்னா என்னண்ணே..ஹல்லோ..எங்க ஓடுறீங்க..பதில் சொல்லிட்டு போங்க..ஹலோ..ஹலோ..


10 comments:

Unknown said...

அண்ணே அது என்ன ஒரு வரில்ல சொல்ல கூடிய விசயம்மா நம்ம கலாச்சாரம் அது ஆயிர வருட பாராம்பரியம்ன்னே அமெரிக்காக்கு போன எல்லாத்தையும் நீங்க மறந்துர்விங்க எங்க கோபாலு தான் சூப்பர் தமிழனடா ஹிஹி

வரதராஜலு .பூ said...

கோவாலு வந்தாச்சா? ஆரம்பமாயிடிச்சா?

பாவம் கோவாலு. ஏண்டா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோம்னு நெனைச்சிருப்பாரு

சிவக்குமார் said...

என்ன சொல்ல வரீங்கன்னு புரியலயே. கலாச்சாரம் என்றாலே நல்லதும் கெட்டதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் கலந்துதான் இருக்கும். தமிழ்கலாச்சாரத்திலும் அப்படியே. முத்தம், அணைத்தல் இவையெல்லாம் பலர் ஏற்க இன்னும் நாளாகும்

மர்மயோகி said...

தமிழ்கலாச்சாரம் என்றால், இந்தியாவில் இருந்துகொண்டு, விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரைத்துக்கொண்டும் , இந்தியாவை கடுமையாக எதிர்த்து தேசதுரோகம் செய்துகொண்டும் - டாஸ்மாக்கில் தினமும் தண்ணியடித்துக்கொண்டும் , சிநிமாகூத்தாடிகளின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், சாராய அபிஷேகம் செய்துகொண்டும், அவர்களை கடவுள் என்றும் வருங்கால தமிழக முதலமைச்சர் (அவன் எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலும் - எந்த மொழிக்காரனாக இருந்தாலும் சரி)...என்றும் போற்றி புகழ வேண்டும்..இதுதான் தமிழ்கலாச்சாரம்,,,

அவிய்ங்க ராசா said...

நன்றி சக்கரகட்டி, வரதராஜலு, தமிழானவன்..

கட்டியணைத்தலாலும், முத்தம் கொடுத்தலாலும், ஆயிரம் வருட பராம்பரிய கலாச்சாரம் கெட்டுபோய்விடும் என்றால் தமிழ்சினிமா, என்றைக்கோ அதை செய்துவிட்டது எனலாம். ஆனால் இதற்காக ஒரு கலாச்சாரமே கெட்டுவிடும் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு இனக்கலாச்சாரம் பல்வீனமாக இல்லை..

முத்தம் கொடுத்தலையும், கட்டி அணைத்தலையும், ஒரு அன்பின் வெளிப்பாடாக எடுத்துக்கொண்டாலே, பிரச்சனை முடிந்துவிடும்..என்பது என் கருத்து..

அமுதா கிருஷ்ணா said...

கமல் விரும்பி கேட்ட பெண்ணிற்கு முத்தம் கொடுத்தார்.இதில் மற்றவர்களுக்கு என்ன வருத்தமோ தெரியலை.இதெல்லாம் நடிப்பு என்று சொல்லிட்டா என்ன செய்வார்கள்.

jbs said...

An affectionate kiss from an elderly person like a father to a child need not be viewed like this.(I donot know to type it in tamil)
JBS

sureshkumar said...

ஒரு பெண், ஒரு செயலுக்கு சரி என்று அனுமதி அளித்துவிட்டால் போதும். ஆண்களும் அந்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றலாம். இதில் எந்த தவறும் இல்லை. அதை விட்டு விட்டு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக நடப்பதோ, தொடுவதோ, முத்தம் இடுவதோ, பலாத்காரம் செய்வதோ மிகப்பெரும் தவறு. ஆனால் பெண்ணின் அனுமதியின் பேரில் ஒரு ஆண் அப்பெண்ணை எது வேண்டுமானாலும் செய்யலாம். அது தவறு இல்லை. இது தான் இன்றைய உலக நியதி. இதை அறியாதவன் பலாத்காரம் செய்து சிறையில் இருக்கிறான். இதை அறிந்தவன் பொதுவில் முத்தம் கொடுத்துவிட்டு நாட்டில் உலவுகிறான். ஆண்களே பெண்களின் மனதினை அறிந்து நடந்து கொள்ளுங்கள். all the best... பெண்களின் மனதினை புரிந்துக்கொள்ள...

அவிய்ங்க ராசா said...

நன்றி அமுதா..ஜே.பி.எஸ். மற்றும் சுரேஷ்

மன்னாரு said...

TV சீரியல்களில் காட்டும் கலாச்சாரம்தான் நம்ம கலாச்சாரம், ரெண்டு பெண்டாட்டி கதை இல்லேன்னா சொத்து சண்டை, இதைவிட வேறே என்ன பெரிசா கிடக்கு?

Post a Comment