Sunday 27 May, 2012

சென்னை என்னை போடா வெண்ணை என்றது..


"இந்த என்.ஆர்.ய்ங்க கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா என்று அலுத்துக்கொண்டாலும் சரி, இல்லைன்னா, கொலைவெறியோடு என்னைத் தாக்க வந்தாலும் சரி..இதை நான் சொல்லியே ஆகணும். சென்னை மண்ணில் கால் வைத்ததும், நம் மண்ணின் மனத்தை
நுகரவேண்டும் என்று மூக்கம்புட்டு ஆசையோடு, விமானத்தில் இறங்கியவுடன், அன்னைத் தெரசா மாதிரி, இந்த மண்ணை குனிந்து ஆசையோடு முத்தமிட எண்ணினேன்.


அப்படி குனிந்து முத்தமிட முயன்றபோது, மண்ணோடு, லைட்டா சாக்கடை மணமும் சேர்ந்து வந்தது.."ஆஹா..பெத்த பேர்டு கப்பா இருக்கே, என்று நினைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால், பேர்டு கப்பு, மண்ணில் இல்லை..பக்கத்தில் நின்று கொண்டிருந்த
நம்ம ஊரு ஒரு ரூல்ஸ் ராமானுஜத்திடமிருந்து.."ஏர்லைன்ஸுல, பணம் கொள்ளையா வாங்குறா..ஆனா, டாய்லெட்டுல சுத்தம் இல்லையே என்ன ஏர்லைன்ஸ்..கேஸ் போட்டாத்தான் இவாளெல்லாம் சரியாவா.." என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தார்..ஆஹா..கோர்ட்டுல கேஸ் போடுறேளோ இல்லையா..இங்க நல்லா போட்டீங்க வோய்..." என்று வாய்விட்டு கதறமுடியாமல் துடித்துக்கொண்டிருந்தேன்...


வாழ்க்கையில் இவ்வளவுநாள் சாப்பிடாமல் இருந்ததில்லை...2 நாள் விமானத்தில் கொடுத்த "வறுத்த சோறு" மற்றும் "பிரியாணி"யைச் சாப்பிட பயந்து, சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி செக்யூரிட்டி செக் முடிந்து, ஏர்லைன்ஸ் டிக்கெட் வாங்கிவிட்டு, சரி, டீ, காபி
ஏதாவது வாங்கலாம் என்று, ஏர்போட்டில் உள்ள கடைக்கு சென்றால், முகமுடி போடாமல் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.


"அண்ணே..டீ ஒன்னு , அப்படியே ஒரு பப்ஸ் ஒன்னு கொடுங்க..."

"இந்தாங்க.."

"எவ்வளவு..."

"140"

எனக்கு லைட்டா டவுட்டு வந்தது..

"இல்ல..ஒரு டி,, ஒரு பப்ஸ்.."

என்னை ஒரு புழு மாதிரி பார்த்தார் கடைக்காரர்..

"அதுதாங்க 140"

"எப்படிங்க.."

"காபி 60 ரூ, பப்ஸ் 80.."

5 ரூபாய்க்கு முக்குக்க்டை டீ சாப்பிடும் எனக்கு சற்று பயமாக இருந்தது...

இந்தியப்பொருளாதாரம், இந்தியாவில் தலை நிமிர்ந்திருக்கிறதோ இல்லையோ, ஏர்போட்டுகளில், தலைநிமிர்ந்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. "சென்னை ஏர்போட்டை உலகத்தரம் உயர்த்திருக்காய்ங்க" என்று பக்கத்து சீட்டு ஆசாமி சொன்னதை நினைவுகூர்ந்தேன். அதே உலகத்தரம் எப்படி இருக்கிறது என்று சற்று ஏர்போட்டுகளில் உள்ள டாய்லெட்டிக்கு சென்று பார்த்தால்,
தெரியும்..உலகத்தரம், பல்லு விளக்கி, பூக்சூட்டி கொண்டிருக்கும் இடம் சென்னை ஏர்போட்டில் உள்ள டாய்லெட்டுதான்.


அட..அட..அட..அக்மார்க் உலகத்தரம்டோய்..ஏர்ப்போட்டில் உள்ள டாய்லெட்டோடு ஒப்பிட்டால், மதுரைப்பக்கம் உள்ள மூத்திரச்சந்து, உலகத்த்ரம்ணே..அதுலயும், நம்ம ஊருக்காரய்ங்களுக்கு, ஒன்னுக்கடிக்கறப்ப, "எச்சி" துப்புறதுல அம்புட்டு சுகம்..தப்பித்தவறி,
டூ பாத்ரூம் போகும் இடத்துக்கு நுழைந்து விட்டு, உசிரோடு நீங்கள் திரும்பி விட்டால், இன்னும் நீங்கள் 100 வயது உயிரோடு வாழப்போகிறீர்கள்
என்று அர்த்தம்..டாய்லெட் சிங்க் முழுவதும்...ஆய்...


பக்கத்தில் "டெய்லி செக் அப் " என்று ஒரு சார்ட் வைத்து, இன்றைய நாளுக்கு "செக்" என்று ஒரு டிக் மார்க் போடப்பட்டிருந்தது.

இங்கு எச்சில் துப்பாதிர்கள் என்று எழுதிவைத்திருந்த எழுத்தின் மேலே, ஒரு கனவான், பான்பராக்கை போட்டு, புழிச்சுன்னு எச்சித்துப்பி வைத்து உலகத்தரத்தை இன்னும் ஸ்டாராங்க் ஆக்கியிருந்தார். பாவம் பயபுள்ளைக்கு தமிழ் தெரியாது போல, ஆல் லாங்குவேஜ்ஜுலயும் எழுதியிருக்கலாம் அந்தப்பக்கம் சென்றால், ஒரு பின்நவீனத்துவ இளைஞர், பெண்ணின் படம் வரைந்து பாகம் குறித்து கிறிக்கி இருந்திருந்தார். அவர் உயிரியல்
பாடத்தில் கண்டிப்பாக 100 மார்க் வாங்கியிருக்க கூடும். ஆனாலும் அவர், சில பாகங்களை, சென்னை பாஷையில்" அம்புக்குறியிட்டு விளக்கியபோது, அவருடைய இலக்கியத்த்ரத்தை வியந்தேன்..இதுபோன்ற இளைஞர்கள்தான், நித்தியானந்தாவுக்கு..அய்யோ..சாரி..இது
விவேகானந்தாவுக்கு தேவை...


(இன்னும் இருக்குடி டார்ச்சர்)

(என்னடா, இது, ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தார் போல், பெரிய பருப்பு மாதிரி எழுதியிருக்கானே என்று நினைத்தால் "சாரி பிரதர்.." நான் இன்னும் மதுரைக்காரன்தான்..வெளிநாடு செல்லாவிட்டாலும், இதுபோன்ற அக்கிரமங்களை தாண்டி வந்த போது,கண்டிப்பாக பதிவு செய்திருக்கிறேன் என்பது என்னுடைய பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும். இனிமேல் இங்குதான் இருக்கப்போகிறேன்..இன்னும் ஒரு வருடம் கழித்து கோடம்பாக்கம் பஸ்ஸடாண்ட் சென்றாலும், இதுபோன்று பார்த்தால் கண்டிப்பாக
எழுதுவேன். ஏர்போர்ட் அதிகாரி யாராவது இந்தப் பதிவை படித்து, ஏதாவது நடக்குமா என்ற சின்ன நப்பாசைதான், இந்தப் பதிவுக்கு காரணம்..கேபிள் சங்கர் பாணியில் "கேட்டால் கிடைக்கும்" என்று இதையெல்லாம், தட்டிக்கேட்க ஆசைதான்..ஆனா வாயைச் சேத்து
அடிச்சுப்புட்டாய்ங்கன்னா, அப்புறம் "கே...ட்...டால்ல்...கி..டை...க்..கும்ம்.... என்று கோணல் மானாலக சொல்ல ஆசையில்லே..அதனால் இதோ, எழுதினால் கிடைக்கும்...(யாராவது கையை ஒடைச்சிப்புட்டுராதிங்கப்பா....)

1 comment:

கோவை நேரம் said...

உங்க ஆதங்கம் சரிதான்..இனி பழகிகிங்க...

Post a Comment