Tuesday 25 May, 2010

விமானத்துல போறது தப்புங்களாயா???

போன தடவை மாதிரி இல்லாமல் இந்த முறை விமானப்பயணம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று வேண்டினேன். கத்தார் வழியாக,வாஷிங்க்டன் என்று சொன்னபோது எனக்கு புது அனுபவமாக இருக்கும் என எண்ணினேன். இதுவரை எந்த அரபு நாடுகளுக்கும் நான் சென்றதில்லை. அட்லீஸ்ட், விமான நிலையமாவது செல்கிறோமே என்று சிறிய சந்தோசம். அதுவும் பயணம், ஏர் இந்தியா மூலம் இல்லை என்று உயிருக்கு உத்தரவாதம் கொடுக்கவே, சந்தோசம் இரட்டிப்பாகியது.

கத்தார் ஏர்லைன்ஸ் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்திய உணவுகள் கிடைக்கும் என்று என் நண்பன் வயிற்றில் பால் வார்த்தான். பொதுவாக அமெரிக்க ஏர்லைன்ஸ்களில் கொடுக்கப்படும் உணவுகள் எனக்குப் பிடிப்பதில்லை. அதுவும் சிக்கனை பாதிவேகவைத்து , காய்கறிகளை பச்சையாக வைத்து “சார்..புட் பிளீஸ்” என்று கொடுக்கும்போது அப்படியே திருப்பி கொடுத்துவிடுவேன். டாய்லெட்டில் பேப்பர் யூஸ் பண்ணும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே இல்லை என்பதுவும் அதற்கு காரணம். அதுவும் விமான டாய்லெட்டுகள் ஓமக்குச்சி நரசிம்மனுக்காக மட்டுமே கட்டப்பட்டன என்பது என் கருத்து. தப்பி தவறி கையை காலை நீட்டினால் அவ்வளவுதான். கொஞ்சம் பெரியதாக வைக்கலாமே, என்று விமான பணிப்பையனாக வேலை பார்க்கும் என் நண்பனிடம் கேட்டேன். “2 சீட் போயிருமில்ல” என்றான்..வருங்காலத்தில் அம்பானியாக வருவான் போலிருக்கிறது. சில ஏர்லைன்ஸ்களில் முன்சீட்டில் உள்ளவர்கள் நம் மடியில்தான் தான் படுத்து கிடப்பார்கள். அவர்கள் இருக்கையை புஷ்பேக் பண்ணினால் உங்கள் மடிக்குதான் வரும். முன்சீட்டில் அழகிய இளம்பெண்கள் இருப்பது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது..

முதல் விமான பயணம் வேண்டுமானால் முதல் ஒரு மணிநேரம் திரில்லாக இருக்கும். ஆனால், 14 மணிநேரம் பயணம் வாழ்க்கையே வெறுத்துவிடும். முன்னால் உள்ள டி.வியில் எவ்வளவு படங்கள்தான் பார்க்கமுடியும். சுறாவுக்கு தப்பித்து விமானத்தில் வந்தால் வில்லு படம் போட்டார்கள். ஆணியே புடுங்கவேண்டாம் என்று ஆப் பண்ணிவிட்டேன். இன்னொரு முக்கியமான விஷயம், ஜன்னலோர சீட் கிடைக்கிறதோ இல்லையோ அடுத்து 14 மணி நேரத்திற்கு யாரோடு குடும்பம் நடத்தப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். சிலநேரம் அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் என்பது என்னுடைய அனுபவங்களில் ஒன்று. போன முறை ஒரு இந்திக்காரர் வந்து, எனக்கு இந்தி கற்று கொள்ளும் ஆசையை சுத்தமாக நீக்கிவிட்டார்.

இந்த முறை யார் என் பக்கத்து சீட் என்று பார்க்க ஆசையாக இருந்தேன். ஒருவேளை ஏதாவது மாடலிங்க் பெண்மணி வந்து “எக்ஸ்கியூஸ்மி” என்று சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வது என்று நினைத்து பார்க்கும்போது, அவுட் ஆப் போகஸில் என் மனைவி கேபின் பேக்கேஜில் இருந்து பாஸ்போர்ட்டை எடுத்தாலே, பூரிக்கட்டையை எடுப்பது போல் இருந்தது. இந்த முறை பூரிக்கட்டையை, பூரி செய்வதற்கு மட்டுமே உபயோகிக்கவேண்டும் என்று அவளிடம் சத்தியம் வாங்கி கொண்டேன்.

பின்னால் திரும்பி கோவாலைப் பார்த்தேன். கோவாலும் ஆவலாக இருந்தான், பக்கத்து சீட்டுக்கார ஆளைப் பார்ப்பதற்கு. அடிக்கடி விமான பணிப்பெண்ணிடம் “எச்சூஸ்மி..ஹூ இஸ் ஹியர்” என்று ஆங்கிலத்தில் மிரட்டி கொண்டிருந்தான். நம்ம ஊருப்பையன் ஒருவன் என்னுடைய சீட் நோக்கி வந்து கொண்டிருந்தான்...காதில் இன்னமும் செல்போன் வழியாக பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். என் சீட் பக்கத்தில் வந்து நம்பரை ஒருமுறை சரிபார்த்தான். என்னைப் பார்த்தான். முகத்தில் அதிர்ச்சி..ஏமாற்றம்…அவனும் மாடலிங்க் பெண்ணை எதிர்பார்த்திருப்பான் போலும்..ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாமல் “இதுதான என் சீட்டு” என்று கேட்டான். வேறு வழியில்லை. “படம் எப்ப போட்டாயிங்க” என்பது போல் “எப்ப கிளப்புவாயிங்க” என்றான். “பைலட் ஒன்னுக்கடிக்கப் போயிருக்கிறார். வந்துருவார்” என்றேன். “மதுரையா சார்” என்றான்.

கோவாலு நிலைமையை பார்க்கலாம் என்றால் அவன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்..கண்களில் கொஞ்சம் கண்ணீர் தெரிந்தது..

“டே..கோவாலு,.”

“ராசா..சீட் மாத்திக்கலாம்டா…நீ இங்கிட்டு வந்துருடா..”

“ஏண்டா..”

“திரும்பிப் பாருடா..”

திரும்பிப் பார்த்தால் ஒரு குஜராத்தி பெண்மணி கோவாலு பக்கத்து சீட்டில். வயது ஒரு 75 இருக்கும். பீடாவைப் போட்டுவிட்டு எச்சில் துப்ப இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். கோவாலு மிரண்டு போயிருந்தான்.

“ராசா..கண்டிப்பா சீட்டுலதான் உக்காரணுமா..லைட்டை ஆப் பண்ணின பிறகு இப்படி தரையில படுத்துக்கவா..”

“அடங்கொய்யாலே கோவாலு..இது என்ன அரசு விரைவு பேருந்தா..வழியில துண்ட விரிச்சி படுத்துக்குறதுக்கு…சீட்டுக்கு போடா..”

“ராசா..எனக்கு இந்தி தெரியாதுடா..”

“கோவாலு..நீ என்ன குவிஸ் போட்டியிலயா கலந்துக்கப் போற..”

“ராசா..அவுங்க வேற பீடா போட்டிருக்காங்க..டிஸ்யூ பேப்பர் கிடைக்கலைன்னு என் பார்ஸ்போர்ட்டை கிழிச்சுரப் போராயிங்கடா…நீயே என் பார்ஸ்போட்டை வைச்சிருடா..”

பார்க்க பாவமாக இருந்தது..கோவாலு வேண்டா வெறுப்பாக சீட் நோக்கி போய்கொண்டிருந்தான். திரும்புறேன். நம்ம ஊருக்காரப்பையன் கூப்பிட்டான்..

“பாஸ்ஸூ..”

“சொல்லுங்க..”

“இதுல சன்.டிவி வருமா..”

16 comments:

vasu balaji said...

மீண்டும் அமெரிக்காவா:))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Rasannae.. Back to form :))

Nizam said...

//இதுல சன்.டிவி வருமா..//

அடங் ங்கொய்ய்யால

இராகவன் நைஜிரியா said...

அமெரிக்கா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// அதுவும் பயணம், ஏர் இந்தியா மூலம் இல்லை என்று உயிருக்கு உத்தரவாதம் கொடுக்கவே, சந்தோசம் இரட்டிப்பாகியது. //

இதுதாங்க கொஞ்சம் உறுத்துது. எத்தனையோ ப்ளைட் போகுது... ஒன்னு ஆக்சிடெண்ட் ஆனதற்கு இப்படி சொல்லிட்டீங்களே..

வாஷிங்டன் போகும் ஏர் இந்தியா ப்ளைட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் என்று சில நண்பர்கள் சொல்லுவார்கள்.

Anonymous said...

தப்பில்லை... ஆனா அஷ்டமி நவமிலே பறக்க வேண்டாமே!

--
முருகன்.

Rajkumar said...

டைரக்டாக பாம்பேயிலிருந்து நியூ யார்க் வரை செல்லும் ஏர் இந்தியா ப்ளைட் - கடைசி சிலமணி நேரங்கள் நாறும்! உணவும் தீயிந்து போய் கிடைக்கும்.

- ராஜ்குமார்.

ஹுஸைனம்மா said...

/அவர்கள் இருக்கையை புஷ்பேக் பண்ணினால் உங்கள் மடிக்குதான் வரும்.//

இதுதான் ரொம்பக் கொடுமை விமானப் பயணத்துல!!

இந்த 14 மணிநேர விமானப் பயணத்தின் கொடுமையை நினைத்துப் பயந்தே என்னவரின் அமெரிக்க/ஆஸ்திரேலியக் கனவை மூட்டை கட்ட வைத்துவிட்டேன்!! :-))

ஜெய்லானி said...

சிரிக்க நிறைய இருந்தாலும் சிந்திக்கவும் இருந்தது. டாய்லட் சில சமயம் கதவு சரியா மூடாது இந்தியன் ஏர்லயன்ஸ்ல . ரெண்டு தடவை அனுபவம் ஒன்னாம் நெம்பர் போக பட்ட கஷ்டம் யப்பாஆஆஆ !!!!!

Azhagan said...

IT is only on e that has CRASHED. Yes, so far. But the Air India/Indian airlines are in the news for all the wrong reasons. They are flying in not so good condition. Statistically, these flights have reported major faults in flight. There was an article on them some time ago.

Anonymous said...

Mainly air hosters are old ladies. heheheheh...

சதீஷ் said...

மிக அருமை. நீண்ட நாள் கழித்து வாய் விட்டு சிரித்தேன்.
“படம் எப்ப போட்டாயிங்க” - பஸ்ல
“எப்ப கிளப்புவாயிங்க” விமானம்
“பைலட் ஒன்னுக்கடிக்கப் போயிருக்கிறார் வந்துருவார்” - மதுரை குசும்பு
சங்கம் வளர்த்த மதுரை.

அவிய்ங்க ராசா said...

ஆமாம் வானம்பாடிகள் சார்..
நன்றி செந்தில்
நன்றி நிஜாம்
நன்றி ராகவன். இதுவரை இந்தியாவில் நடந்த விமான விபத்துகளில், 90% ஏட் இந்தியாவுக்கு சொந்தமானவை..((
அஷ்டமி, நவமில பறந்தா நமக்கு ராகுகாலமாண்ணே..))
நானும் இதை அனுபவித்திருக்கிறேன் ராஜ்குமார்..
வருகைக்கு நன்றி ஹூசைனம்மா..
உங்களுக்குமா ஜெய்லானி..))
அனானி, கரெக்டாக சொன்னீர்கள்..
அனானி, எல்லாம் யங்க்ஸ்டர்ஸ்தான்..)))
நன்றி சதீஷ்..

மணிப்பக்கம் said...

:):):) அருமை!

senthil kumaran said...

என்ன ராசா பயனத்திலேடே பதிவ ஆரம்பிச்சிட்டீங்கலாட்டு இருக்கு. ஆமா கோபாலு கூட வர்றாப்பிளினு சொல்லவே இல்ல. இருந்தாலும் நல்ல பதிவு, நல்ல இருங்க.

nirmal,indonesia said...

good one..vai vittu sirithen

Post a Comment