Sunday 4 August, 2013

சேரன் - ஒரு தந்தையின் வலி



"மச்சி..இந்த சினிமாங்காரய்ங்களே இப்படித்தாண்டா..காதல், காதல்ன்னு படம் எடுத்துட்டு சம்பாதிச்சுட்டு, தனக்குன்னு வந்தவுடனே, என்னா வேலை பண்ணுறாய்ங்கன்னு பார்த்தயா...ஊருக்குத்தாண்டா உபதேசம்..."

சேரன் மகள் தாமினி அழுதுகொண்டே "என் அப்பா, எங்க காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்..கொலை மிரட்டல் விடுக்கிறார்" என்று மீடியாவில் குமுறியபோது, பல இளைஞர்களின் விவாதங்கள் மேல் கூறியவாறுதான் இருந்திருக்கும்..

நடுத்தர வர்க்கத்தினரின் துன்பங்களை அழகியலுடன் படம்பிடித்த இயக்குநர், ஒரு நிமிடத்தில், தெலுங்கு பட வில்லன் போல தெரிந்திருப்பார் பல இளைஞர்களுக்கு...ஏனென்றால் நம்ம ஊர் சினிமாக்கள் இளைஞர்களை பழக்கியிருப்பது அப்படித்தான்..

கதாநாயகனும், நாயகியும் தெய்வீக காதல் புரிவார்கள்..மீசையை முறுக்கிகொண்டு, "எங்க குடும்ப மானத்தை கெடுக்க வந்தவ இனிமேல் எங்களுக்கு தேவையில்லடா..அவிங்க ரெண்டு பேரையும் வெட்டித்தள்ளுங்கடா" என்று அருவாளை தூக்கும் அப்பாக்களை நமக்கு தமிழ்சினிமாக்கள் பழக்கப்படுத்தியிருக்கிறது..

நாயகனும், நாயகியும், இந்த காதலில் எப்படி ஜெயித்தார்கள்..அல்லது எப்படி உயிர்தியாகம் செய்து, காதலை காப்பாற்றினார்கள் என்று காதலுக்கு உரம்போடாத சினிமாக்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை..

ஆனால் நிஜம் அப்படியா இருக்கிறது. அப்பா, ஏதாவது ஒரு ஆசிரியராகவோ, அரசு அலுவகலத்தில் ஒரு இடைநிலை ஊழியராகவோ இருப்பார்..எல்லா ஆசைகளையும் அடக்கி கொண்டு, மாதத்திற்கு ஒரு சினிமா என்று கணக்குபோட்டு கொண்டு, வங்கியில் லோன் போட்டு, மேனேஜர்களின் திட்டுகளை வாங்கிகொண்டு, முகத்தில் அனைத்தையும் மறைத்துகொண்டு, வீட்டுக்கு வந்து "செல்லக்குட்டி.." என்று மகள்களை அணைத்துக்கொண்டு முத்தமிடும்போது, அந்த வலி, மகள்களுக்கு தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி..

பல காதல் சினிமாக்களை பார்த்துவிட்டு "ஹே..அவன் ஹேண்ட்சம்மா இருக்கான்ல..உன்னைய பார்க்குற மாதிரி இருக்குதுடி.." என்று நண்பிகள் ஏத்திவிடுவதால், சட்டென ஒரு பார்வை பார்த்துவிட்டு "நம்மைத்தான் பார்க்குறானோ.." என்ற குறுகுறுப்புடன் தூங்கும் மகள்களுக்கு அன்று தூக்கம் வராது..

அலைபாயுதே மாதவன் போல பஸ்ஸிலோ, ரயிலிலோ அருகில் வந்து அமர்ந்து "எக்ஸ்க்யூமி..நீங்க ரொம்ப அழகு" என்று சொந்த சரக்கே இல்லாமல், கேணத்தனமாக சிரித்தாலும் "ப்ச்..இவன் நம்ம ஹஸ்பெண்டா வந்தா எப்படி இருக்கும்" என்று அவனுடைய சட்டையில் மணக்கும் செண்ட் வாசனையில் , சாயங்காலம், அலுப்புடனும் அசதியுடனும் வந்து கட்டிக்கொள்ளும் அப்பாவின் வியர்வை வாசனை எப்படி ஞாபகம் இருக்கும்..

தன்னை ஷாஜகான் விஜய் போல காட்டிக்கொள்வதற்காவே, "மச்சி..அவ உன்னை காதலிக்கிறாதான..தூக்குறோம்டா..நீ மாலையோட கோயிலுல ரெடியா இரு..அவளை தூக்கவேண்டியது எங்க பொறுப்பு" என்று அப்பன் பாக்கெட்மணியாக கொடுத்த ஐநூறு ரூபாய்க்கு காதலின் காப்பளராக நினைத்துகொண்டு, தீவிரவாதிகள் போல ஒரு வேனை ஏற்பாடு செய்து, அவளை கடத்திவிட்டு பெருமிதத்துடன் காலரை தூக்கிவிடும்போது, அவன் வீட்டில் வயதுக்கு வந்த தங்கையெல்லாம் நினைவுக்கு வருவதில்லை

"மெளனம் பேசியதே" படத்தில் சிலகாட்சிகளைத் தவிர, காதலை தூக்கிபிடிக்கும் தமிழ்சினிமாக்களில், எங்கும் அப்பன்களின் வலியை காட்டியதாக ஞாபகம் இல்லை..

இன்னும் திருமணம் ஆகாத இளைஞராக இருந்து, சேரனின் பேட்டியை பார்த்தால், "நல்லா நடிக்கிறான்யா" என்றுதான் தெரியும்..ஆனால், ஒரு நிமிடம், ஒரு பெண்ணின் தந்தையாக, நடுத்தர வர்க்கத்தின் முகமூடியை அணிந்து கொண்டு பாருங்கள்..அது ஒரு பேட்டி அல்ல, "ஒரு தந்தையின் வலி"

தன் மகள்கள் நல்ல துணி உடுத்தவேண்டும் என்று  காசை கணக்கு பார்த்து காலத்திற்கே ஒவ்வாத கட்டம்போட்ட சட்டையுடனேயே  இன்னமும் சுத்தி கொண்டிருக்கும் அப்பாக்களை காட்டிலும், "அய்யோ..என் மவளை என்ன பண்ணிருப்பானோ" என்று மனதுக்குள் அழுதுகொண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமலும், மனைவியை கட்டிகொண்டு அழும் அப்பாக்களை காட்டிலும், "எம்மவ, இங்க்லீசு என்னமா பேசுறா தெரியுமா சார், ராணி மாதிரி ஆக்குவேன் சார்..பெரிய படிப்பெல்லாம் படிச்சு, தங்கமா வாழப்போறா சார்" என்று ஆயிரம் தடவை அலுவகத்தில் அலுக்காமல் சொல்லாமல் அப்பாக்களாய் காட்டிலும், "மவளை ரொம்ப நேரம் கண்முழிச்சு படிக்கவேணாம்னு சொல்லு..உடம்பு கெட்டுபோகும்..முதல்ல அவளுக்கு ஒரு டீ போட்டு கொடுக்காம என்ன புடிங்கிட்டு இருக்க" என்று மனைவியிடம் கோபம் காட்டும் அப்பாக்களை காட்டிலும் , "என் மவ வயசுக்கு வந்துட்டா சார்..ரெண்டு நாள் லீவுவேணும்" என்று அலுவலகத்தில், தன்னை விட இளவயதான மேனேஜர் முன்னால் கைகட்டி குறுகி நிற்கும் அப்பாக்களை காட்டிலும், ரெண்டு வருடம் பல்லைக் காட்டி பின்னாடியே சுற்றி "ஹே..நீ ரொம்ப அழகா இருக்க" என்றும் "ஐ.லவ்.யூ டியர்" என்று எஸ்.எம்.எஸ் விடும் அழகன்கள் தான் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரே வரியில் சொல்வேன்..

"போங்கடி..நீங்களும் உங்க இழவெடுத்த புண்ணாக்கு காதலும்..."


25 comments:

Anonymous said...

Thanks for such a wonderful post. Well said.

bandhu said...

எருதின் வலி காக்கைக்கு தெரியாது. அவரவர்க்கு வரும்போதுதான் எந்த வித லௌகீக அடிப்படை இல்லாத காதலெல்லாம் எவ்வளவு வெத்து என்று தெரியும். காதலை பொருத்தவரை எனக்கு மிகவும் பிடித்த டயலாக் "ஓடி விளையாடு பாப்பா. ஆனா என் தோட்டத்துல விளையாடாதே!"

ராஜி said...

"போங்கடி..நீங்களும் உங்க இழவெடுத்த புண்ணாக்கு காதலும்..."
>>
செம தூள். அப்பவின் வலியை எடுத்து சொன்ன விதம் அருமை. வாழ்த்துகள்

Unknown said...

ரொம்ப சரியாய் சொன்னிங்க ராசா

துரை செல்வராஜூ said...

தனக்கு வந்தால் தான் தலைவலி தெரியும்!. எனினும் திரு. சேரன் அவர்கள் பிரச்னையில் இருந்து மீண்டு வரவேண்டும். இத்தனை காலம் கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையர்க்குத் தெரியாதா!-- பிள்ளைகளுக்கு எப்படி நல்லது செய்ய வேண்டும் என்று!..

Anonymous said...

பொழைப்புக்கு காதல் சினிமா எடுத்து ஊரை கெடுக்கலாம்.தனக்கு வரும் போது நடுத்தர அப்பான்னு நடிக்கலாம் .நான் குறை சொல்லவில்லை ,அப்புறம் ஏன் சினிமாவில் அதை பெருசா புடுங்கி மாதிரி காமிகிரிங்க .எத்தனை பொண்ணுக மனசு கெட்டு போய் இருக்கும்.

Anonymous said...

Well said

எம்.ஞானசேகரன் said...

Good Post.........

கார்த்திக் சரவணன் said...

கண்மூடித்தனமாய்க் காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் சவுக்கடி.... வாழ்த்துக்கள் நண்பரே....

ப.கந்தசாமி said...

பெற்றவன் வேதனை பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. தவிர அவர்களுக்கு (காதலர்களுக்கு) உலக நடப்பும் தெரிவதில்லை. என்ன செய்ய? காலம் செய்யும் கோலம்.

Anonymous said...

பக்குவப்பட்ட காதலை நல்ல பெற்றோர் எதிர்ப்பதில்லை, அவ்வாறு எதிர்த்தால் அவர்கள் நல்ல பெற்றோரும் இல்லை, பக்குவமற்ற காதலை நல்ல பெற்றோர் விரும்பவது இல்லை, அவ்வாறு ஆதரித்தால் அவர்கள் உங்கள் பெற்றோரே இல்லை. விரிவாக இவற்றைக் குறித்து எழுத முயல்கின்றேன். நன்றிகள் !

அபயாஅருணா said...

Unadulterated truth!

Robert said...

ஒரு சராசரி தகப்பனின் வலி வார்த்தைகள் முழுவதும் தெரிகிறது. அதிலும் கடைசி பத்தி,வரி மிக அருமை .

அமுதா கிருஷ்ணா said...

சொத்துல பத்து காசு கிடையாதுன்னு எழுதி வாங்கிடணும் அப்ப தெரியும் காதலனின் பவுசு.

Unknown said...

இங்க எல்லாரும் பொண்ணுங்கள பத்தி மட்டும் கவலை படுறாங்க. பொண்ணுங்க- அப்பா சொல்ற பசங்கள காதலிக்கனும், கல்யாணம் பண்ணனும். பையங்க மட்டும் யாரு வீட்டு பொண்ண வேணாலும் காதலிக்கலாம் உறவு வசிக்கலாம். அந்த பொண்ணும் யாரோ ஒருத்தனுக்கு மகள் அல்லது தங்கை என்கிற நினைப்பு வர மாட்டேங்குது. பையன் மட்டும் என்ன வேணா பண்ணலாம். பொண்ணுங்கள கண்டிக்கிற அப்பா அம்மா, பையனயும் கண்டிங்க அந்த பொண்ணோட பெத்தவங்க பாவம்னு சொல்லுங்க.

சிவ.சரவணக்குமார் said...

பெண் குழந்தைகளைப் பெற்றவனின் வலியை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...... நன்றி நண்பரே.........

வரதராஜலு .பூ said...

//"போங்கடி..நீங்களும் உங்க இழவெடுத்த புண்ணாக்கு காதலும்..."//

நிச்சயமாக இதுதான் சரி

ரொம்ப டச்சிங்கான பதிவு சார்

Another Dad said...

You made me cry...

ராமுடு said...

Good one Rasa.. Being father of a girl, I totally understand your words.

Anonymous said...

என்னதான் பாசமா இருந்தாலும் இல்ல, இருக்கிற மாதிரி நடித்தாலும், ஒரு பெண் அப்பனையா கட்டிக்க முடியும். அதவும் இல்லாம, இப்ப கண்ண கசக்கிற சேரனே கதலிச்சுதானே கல்யாணம் செய்துகிட்டார்? அப்ப மட்டும் இனிச்சுதாக்கும்.

மகிழ்நிறை said...

பெண்களுக்கு நல்ல அறிவுரை.பெண்ணை பெற்றோருக்கு நல்ல ஆறுதல் ,ஆனால் ஏன் சார் அட்வைஸ் பண்ற யாரும் ஆண்களுக்கு பண்றதில்லை.போங்கடின்னு சொல்றதுல ஒரு மகிழ்ச்சி.அப்படித்தனே?

Anonymous said...

Pengalai mattum yen thittugirargal endral, pennai oru udamaiyaga paarkum manamthaan. Pen poi vittal gouravam poi vidum endru kavalai paduvathaal thaan

Anonymous said...


"போங்கடி..நீங்களும் உங்க இழவெடுத்த புண்ணாக்கு காதலும்..."

Good one. Only father of a daughter can understand this pain.

Rest of the pack are in the Romeo group.

Jaaffer Sadiq said...

Perfect a sonneenga Sir!

Unknown said...

இதுங்களுக்கு எங்க சார் புத்தி போகுது........ஒள்ளிய இருந்த தனுஷ், சிரிச்ச சூரியா.....வழிஞ்ச ஆர்யா ........மாதிரி இருக்கான்னு......பின்னாடியே போகுத்ங்க ..........

Post a Comment