Saturday 11 August, 2012

அப்ப இன்னைக்கு புளியோதரை இல்லையா…



எனக்கு விநாயகரைப் பிடித்த அளவுக்கு கிருஷ்ணரை பிடிப்பதில்லை. ஆனாலும், நேற்று கிருஷ்ண ஜெயந்திக்காக, கோயிலுக்குச் சென்றேன்.அமெரிக்காவில், இதுபோன்ற விஷேசங்களுக்கு, கோயிலில் கூட்டம் அள்ளும். ஆனால் நான் போனது, கிருஷ்ணரைப் பார்க்க அல்ல. திருவிழா காலங்களில், கோயிலில் கொடுக்கப்படும், புளியோதரை.

புளியோதரையை நீங்கள், சரவண பவனில் சாப்பிட்டிருக்கலாம், வசந்த பவனில் சாப்பிட்டிருக்கலாம். ஏன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட சாப்பிட்டிருக்கலாம். ஆனால், திருவிழாக்காலங்களில் கோயிலில் கொடுக்கப்படும், புளியோதரைக்கு ஈடு இணை இல்லை. நல்ல கெட்டியான பதத்துடன், புளியை சுண்டக்காய்ச்சி, சோற்றை குழைய வடித்து, புளிக்கரைசலில் கொட்டி, கொஞ்சம் உப்புபோட்டு, வாயில் ஒரு விள்ளல்(நன்றி கேபிள்) இட்டு பாருங்கள்ம்டிவைன்ன்ன்(திரும்பவும் நன்றி கேபிள்உணவகம் பற்றிய பதிவுகளில் வரும் இந்த நாடகத்தனமான வார்த்தைகள் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை)

ஐயர் ஆத்து பெண்களுக்கு அடுத்ததாக எனக்குப் பிடித்த விசயம், அவர்கள் வீட்டில் கொடுக்கப்படும், இந்தப் புளியோதரையும், வத்தல் குழம்பு சாதமும் தான். இன்னும், மேற்கு மாம்பலம், “காமேஸ்வரி மெஸ்ஸில் கிடைக்கும் வத்தல் குழம்பு, புளி சாதத்திற்கு அவ்வளவு கிராக்கி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வாய்ப்பு வருடத்திற்கு, இரண்டு மூன்று தடவை கிடைக்கிறதென்றால், சும்மா விடுவேனா..எடு காரை என்று கோயிலுக்குப் பறந்தேன்(இங்கு, அமெரிக்காவில் எனக்கு கார் இருக்கு என்றால், “பந்தா பண்ணுகிறான்என்று நினைத்து விடாதிர்கள். நம்ம ஊரு ஸ்பெளண்டர் மாதிரி, இங்கு கார். இங்கு பைக் வந்திருந்தால் தான் மவுசு)

அடித்து பிடித்து கோயிலுக்கு சென்றால், காரை நிறுத்த இடம் இல்லை. கொஞ்சநேரம் காத்திருந்து, அரக்க பரக்க கோயிலுக்குச் சென்றால், வெளிவரும் பக்தர்கள் முகத்தில் அவ்வளவு ஒரு ஏமாற்றம். எனக்கு அப்பவே சின்னதாக ஒரு சந்தேகம்..”ஆஹா..கவுத்துட்டாய்ங்களா..”. முந்தா நாள் அடித்த சரக்கு போதை, இன்னும் கலையாத நிலையிலும், திருநீரை நெற்றி முழுவதும் அப்பியபடி, பக்தி பழமாக காட்சியத்த அல்லது முற்பட்ட நண்பன் கொலைவெறியோடு வெளியே வந்ததைப் பார்த்தபோது, எனக்கு மீதம் இருந்த சந்தேகம், முற்றிலும் போய்விட்டது..”ரைட்டு..இன்னைக்கு கோயிலுல புளியோதரை இல்லை..”

அப்படியே திரும்பிவிடலாம் என்று பார்த்தாலும்..”கொஞ்சநேரம் கழிச்சு குடுப்பாய்ங்களோஎன்ற நப்பாசை கொஞ்சம் எட்டிப்பார்த்தது. அமைதியா உக்கார்ந்து நடக்கும் பூஜைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அது என்னவோ தெரியவில்லை, திருவிழாக் காலங்களில் மட்டும், வரும்பாரு, நம்ம ஊர்க்காரய்ங்களுக்கு பக்தி..யப்பே..யாரைப் பார்த்தாலும், பச்சகுழந்தை மாதிரி, பவ்யமாக வணக்கம் போட்டு, தலையை குனிந்து, “துண்ணூறு எடுத்துக்கங்க பாஸ்என்று சொல்லும்போது..ஆஹா..பயபுள்ளை, இப்படி மட்டையா பணியுறானே..என்று நினைக்கத்தோன்றும்..இந்த மட்டைக்கும், முந்தா நாள் சரக்கு அடித்துவிட்டு ஆகும் மட்டைக்கும், சீனா, ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவதற்கும், இந்தியா வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம். மட்டைனா, மட்டை அப்படி ஒரு மட்டை.

பூஜை ஒரு பக்கம் நடக்க, ஐயர் வாய்திறந்து, “புளியோதரை வாங்க, எல்லாரும் செத்த க்யூவுல வாங்கோ..” என்று வாய் சொல்லிவிடுவாரோ, என்ற ஆவலுடன் நின்றிருந்தேன்..ம்..ஹூம்..அவர் தட்டில் கிடைக்கப்போகும், தட்சணை டாலர்களுக்காக, வெயிட் பண்ணி கொண்டிருந்தது, அடியேனுக்கு அப்புறம் தான் தெரிந்தது..வயிறு வேறு புளியோதரைக்காக வெயிட் பண்ணி, டயர்டாகிப் போக, ஓடிவிடலாமா என்று நினைத்தேன்.

ஐயர் இப்போது வாயைத் திறந்தார்..அவரையே ஆவலுடன் பார்த்தேன்..”இப்போ கல்சுரல் ப்ரோக்ராம்ஸ்….எல்லோரும் அப்படியே உக்காருங்கோஎன்றார். ஏமாற்றமாகிப் போனது..அடுத்து கண்டிப்பாக புளியோதரைதான் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு கல்சுரலைப் பார்க்க ரெடியானேன்..ஒரு ஐயர் ஆத்து மாமி, பரதநாட்டியம் அரங்கேற்றி கொண்டிருக்க, என்னுடைய வயிறும், ஒருபக்கம் அரங்கேற்றிக் கொண்டிருந்தது..கோபத்தில் ஓடிப்போய், ஐயர் சட்டையை(..சட்டை போடமாட்டாருல்ல..), வேட்டியைப் பிடித்து, “அய்யரே..எப்பய்யா, புளியோதரை போடுவீங்க) என்று சத்தம் போட்டு கேட்கலாம் என்றால், கோயில்க்குள் புகுந்த தீவிரவாதி என்று நினைத்து போட்டுத்தள்ளிவிடுவார்களோ என்ற பயம் வேறு..புளியோதரை எனக்கு உயிர் என்றாலும், அந்த புளியோதரையை சாப்பிட உயிர் வேண்டுமே, என்பதற்காக அமைதி காத்தேன்..

மாமி இன்னமும், “காலைத் தூக்கி…” என்ற பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தார்..வடிவேலு பாணியில், “மாமி..ரொம்ப நேரமா, காலைத்தூக்கிட்டு நிக்குறேளே..செத்த உக்காருங்கோ..காலு வலிக்கப் போகுதுஎன்று சொல்லலாம் என்று நினைத்தால் அடிபின்னிவிடுவாய்ங்களோ என்ற பயம் வேறு..வேற வழியில்லாமல், அடுத்து, ஐயர் வீட்டு குழந்தைகள், கட்டாயமாக பாடிய, அல்லது பாடவைக்கப்பட்ட, சமஸ்கிருத மொழியில் பாடிய சுலோகங்களை அல்லது பாடல்களை..தொடையைத் தட்டிக்கொண்டு..”என்னம்மா பாடுறா பாருங்கோ” என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர் சொன்னாலும், “அடுத்து புளியோதரை போடுவாய்ங்கள்ள” என்று மனதை தேற்றிக்கொண்டு உக்கார்ந்திருந்தேன்..

அடுத்து, எல்லா கலைநிகழ்ச்சிகளும், முடிந்த பிறகு, எனக்குப் பிடித்த அந்த வார்த்தையைக் கேட்டேன்..எனக்கு காற்றில் பறப்பது போல் இருந்தது..இந்த உலகத்தில் பிறந்த பயன் அப்போதுதான் எனக்கு கிடைத்தது..அந்த வார்த்தை “பிரசாதம் வாங்க..எல்லாரும் லைனுல வாங்க..”

அவ்வளவுதான்..முதல் ஆளாக போய் நிற்கவேண்டும் என்ற அவசரத்தில் கால் தடுமாறினாலும், ஓடிப்போய் பார்க்கிறேன்..எனக்கு முன்னால், பத்து புளியோதரை தீவிரவாதிகள் லைனில்..”துண்ணூரை எடுத்துக்குங்க பாஸ்” என்று பவ்யமா சொன்ன, மப்படித்த என் நண்பனும் அடக்கம்..சரி பத்தாவது ஆளாத்தானே நிற்கிறோம்..புளியோதரை அவ்வளவு சீக்கிரம் காலியாகது, என்னை நானே தேற்றிக்கொண்டே மெதுவாக லைனுக்குள் முன்னேற, மனதுக்குள், “ஆஹா..இன்னைக்கு புளியோதரை எப்படி இருக்கப்போகுதோ, என்று மனதுக்குள் குதிரை ஓடியது….போன் தடவை,உப்பு தூக்கலா இருந்ததே..இந்த தடவை, எல்லாம் கரெக்டா இருக்குமா..பார்சல் கேட்டா கொடுப்பாய்ங்களா..ஆஹா.. கேரிபேக்கை மறந்துட்டமோ” என்று நொந்துகொள்வதற்கும்..என் முறை வந்தது..ஆசையாய் கையை நீட்ட, குடுக்குறாரு பாருங்க..”ஒரு ஓய்ஞ்ச வாழைப்பழமும்..காய்ஞ்ச ஆப்பிளும்.,” என் மனதில் கட்டியிருந்த அனைத்து மனக்கொட்டைகளும், தவிடுபொடியானது…ஒரு நிமிசத்தில்..கால் கடுக்க காத்திருந்து, “காலை தூக்கி” பரதநாட்டியம் பார்த்து, ஒன்னுமே புரியாவிட்டாலும் “சபாஷ்..குழந்த என்னமா பாடுது போங்கோ” என்று அக்குளை சொரிந்து கொண்டு சொன்ன, பக்கத்து சீட்டுக்காரரை சகித்துக்கொண்டு, வயிறை பிடித்து கொண்டு லைனில் நின்னது எல்லாமே, இந்த ஓய்ஞ்ச வாழைப்பழத்துக்குத் தானா..எனக்குப் பொத்துக்கொண்டு வந்தது..ஆற்றாமையோடு, சத்தமாக கத்தியே விட்டேன்…

“அப்ப இன்னைக்கு புளியோதரை இல்லையா…”

11 comments:

அமுதா கிருஷ்ணா said...

இப்பொழுதெல்லாம் கோயிலில் கொடுக்கும் எதுவும் வாயில் வைக்க முடியாது. காசு போட்டு வாங்கி தூக்கி போடுற மாதிரி இருக்கு.

அம்பாளடியாள் said...

உங்களுக்கு மட்டும் இல்ல சார் எங்களுக்கும் புளியோதரை என்றால் போதும் (உயிர் )அனேகமா இதை எப்படி செய்வது என்ற தகவல் பரி பூரணமாய் கிட்டிவிடும் என்ற நம்பிக்கையில்தான்
ஆக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன் :(

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... கடைசியிலே புளியோதரை போச்சே...

ரசித்துப் படித்தேன்... நன்றி ஐயா...

Jayakumar Chandrasekaran said...

indliyil vadaiyavathu kidaikkattum

மலரின் நினைவுகள் said...

இதனால் விளக்கப்படும் நீதி யாதெனில்...
மண்குதிரைய நம்பி ஆத்துல இறங்கறதும், அய்யரை நம்பி புளிசோத்துக்கு ஏங்கறதும் ஒண்ணுதான்...!!!

திரட்டு.கொம் said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

வலைஇல்லம் said...

என்னங்க ராஜா உங்க பதிவை ரொம்ப நாளா காணோம்

அவிய்ங்க ராசா said...

நன்றி அமுதா..அனானி நண்பர், தனபாலன், அம்பாளடியாள்

நன்றி வலை இல்லம்..வேலை ரொம்ப அதிகம்..அதனால்..

Samy said...

Canada vanga sir. Kovilsatham(spicey mixed rice) arumai. Samy

bond said...

first time reading very interesting and smiely post
thank you

துளசி கோபால் said...

காரை எடுத்துக்கிட்டு அங்கே ஓடுனதுக்கு பேசாம நம்ம வீட்டுக்கு வந்துருந்தால் புளியோதரை கிடைச்சிருக்கும்.

நம்மாத்து ஸ்பெஷல் நேத்து புளியோதரைதான். எனக்கே பிடிச்சுப்போச்சுன்னா பாருங்க அவ்ளோ டேஸ்ட்டு:-)

Post a Comment