Sunday 10 June, 2012

தடையறத் தாக்க – விமர்சனம்




கில்லி படத்துக்குப் பிறகு, படம் தொடக்கத்திலிருந்து, கிளைமாக்ஸ் வரை, விறுவிறுவென்ற ஒரு திரைக்கதையை இந்தப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இதற்கு முன்புநான் மகான் அல்லபடமும், இதே விறுவிறுவோடு அமைந்திருந்தாலும், படம் தொடக்கத்திலிருந்து, சற்று பதட்டத்தோடு அணுகவைத்தது, இயக்குநரின் வெற்றி என சொல்லலாம்.

பொதுவாக, ஹீரோவுக்குத்தான் பிளாஷ்பேக் வைத்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் வில்லன்களுக்கு, பிளாஷ்பேக் கொடுத்ததன் மூலம், “ஏதோ இருக்குய்யாஎன்று படத்தைப் பார்க்கத் துவங்குகிறோம். படத்தின் இரண்டாவது காட்சியே, இந்த பிளாஷ்பேக் தான்.

ஆக்சன் படங்களுக்கு ஒரு விதி உள்ளது. ஹீரோவின், ஹீரோயிசம் எடுபடவேண்டுமென்றால், வில்லன்களை, ஒரு பங்கு ஹீரோவை விட தூக்கி காட்டியிருக்கவேண்டும். இல்லையென்றால், ஹீரோவாக நடிப்பது ரஜினியாக இருந்தாலும் எடுபடாது. சிவாஜியின் வெற்றிக்கும், பாபாவின் தோல்விக்கும் இதுவே காரணம். இந்தப் படத்தில், ஹீரோவைக் காட்டிலும், வில்லனுக்கு நிறைய காட்சிகள். வாய்ப்பு கிடைத்தால், அங்கிட்டு கிடைக்கிற கட்டையை எடுத்து, வில்லன் மண்டையில் ஒரு போடு, போடவேண்டுமென்ற வெறியை ஏத்தும் அளவுக்கு, வில்லன் கதாபாத்திரங்களையும், அதற்கேற்ப நடிகர்களையும் செலக்ட் செய்ததில், இயக்குநர் வெற்றி பெறுகிறார். இதனாலேயே அருண் விஜய்யின் ஹீரோயிசம் நன்றாக எடுபடுகிறது

ரொம்ப நாட்களாக, கார் பிரேக்கை மட்டுமே பிடித்துக்கொண்டிருந்த அருண்விஜய்க்கு, உண்மையிலேயே இந்தப் படம் பிரேக்தான். இதை வைத்துக்கொண்டு, அப்படியே, ஆக்சன் ஹீரோ, சூப்பர் ஹிட் ஹீரோ,, எம்.எல்.., எம்.பி, அமைச்சர்..என்று எதிர்காலம் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அருண்விஜய் அண்ணா, ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்குங்க.. “இதெல்லாம், இதுபோன்ற இயல்பான திரைக்கதையோடு, நல்ல ஆக்சன் படங்களில் நடித்தால் மட்டும் தான்.”, அடுத்த படத்தில்என்னை வாழவைத்த ரசிகர்களே” என்று ஒரு விரலை ஆட்டி,  ஹீரோ இண்டொரடக்சன் சாங்க் வைத்தீர்களென்றால், திரும்பவும் கார் பிரேக்தான்.

படத்துக்கென்று தனியாக காமெடி டிராக் வைக்காமல், நண்பர்களோடான, இயல்பான காமெடி படத்திற்கு பலம். அருண்விஜய்யோடு வரும் நண்பர்களின், இயல்பான காமெடி ரசிக்கவைக்கிறது. “15 நிமிசம் இருக்கு, என்னை என்ன வேணுனாலும் பண்ணிக்கடா” என்று அதகளம் பண்ணும் மம்தா, காதலிக்கு, பேண்டிஸ் வாங்கி கொடுக்கும் காதலன் என்று வித்தியாசமாக காதலை அணுகியிருந்தாலும், “கொஞ்சம் ஓவரோ” என்று சொல்லத்தோணும் வேளையில், பஸ்ஸடாப்பில் முத்தம் வரை வந்துவிட்ட சென்னைக்காதலை நினைத்து, கண்ணை..இது..சாரி..வாயை மூடிக்கொள்கிறேன்.

இரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொண்டு, இயக்குநருக்கு உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். நல்லவேளை, பிண்ணனி இசை, படத்தின் மூடைக் கெடுக்காமல் செல்வதால், தமன் தப்பித்தார். இல்லையென்றால் இயக்குநர், இசையமைப்பாளரைக் கொலைவெறியோடு தேடும் வாய்ப்பு உள்ளது. இயல்பான ஒளிப்பதிவோடு ஆரம்பித்த சுகுமாருக்கு, இது, இன்னொரு வெற்றி. ஆனாலும், இடைவேளைக்கு அப்புறம், படம் முழுவதும், இருட்டிலேயே எடுத்தது, கொஞ்சம் கடுப்படிக்கத்தான் செய்தது.

இயக்குநர் மகிழ்திருமேனிக்கு இரண்டாவது படமாம். நம்ப முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும், என்ற பரபரப்பை, படம் முழுவதும் மெயிண்டெயின் பண்ணியிருப்பதற்கு பாராட்டுக்கள். சில இடங்களில் ஓவர் வன்முறையை காட்டியிருந்தாலும், நான் முன்பே சொல்லியிருந்தது போல, இதுபோன்ற காட்சிகள், ஹீரோயிசத்திற்கு, மிகவும் உதவியிருக்கும் வகையில், தப்பித்தார். இயக்குநருக்கு, இந்தப் படம் ஒரு நல்ல விசிட்டிங்க் கார்டு. இதைவைத்து, அவர், இன்னும் நல்ல படங்களை எடுத்து, தமிழ்திரையுலகையும், பதிவுலகத்தையும்(பின்ன, சினிமான்னு ஒன்னு இல்லைன்னா, பதிவுலகத்தை, எப்பவோ கதவை சாத்தி மூடியிருப்பாங்கள்ள) காப்பாற்ற வேண்டுமாய், “பவர்ஸடார் 19 வது வட்ட” சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

கடைசியாக, தடையறத்தாக்க – தாராளமாக பார்க்கலாம்..


No comments:

Post a Comment