Monday 20 June, 2011

விஷாலின் அவன் இவன் – திரைவிமர்சனம்

விஷால் நடித்த அவன் இவன் படத்தை பார்க்கநேர்ந்தது. கைகொடுங்கள் விஷால்..என்ன ஒரு உடல்மொழி(என்னண்ணே..இப்ப ஒருமாதிரியா இலக்கியமா எழுத வருதுல்ல). பெண்மை கலந்த நளினத்தோடு, கண்களை, சுருக்கிக்கொண்டு, யப்பா, என்ன ஒரு ஆளுமை(கண்டிப்பா, இலக்கியமேதான்..அவிங்கராசா..பின்னிட்டடா). படம் ஆரம்பிக்கும்போது, ஒரு குத்தாட்டம்(துள்ளலிசை என்று இலக்கியத்தில் சொல்லுவார்கள்..) போடுவார் பாருங்கள்..தக்காளி(இது கூட இலக்கியம்..சென்னை இலக்கியம்)..இதுதான் உண்மையான குத்தாட்டம்.. இதற்குமேல் ஒரு குத்தாட்டம் எந்த படத்திலும் போடவே முடியாது. உசிரை கொடுத்து நடிக்கிறான்யா என்று சொல்லுவார்களே..அது, இந்த படத்தில் விஷால் நடிப்பை சொல்லலாம். சரசரவென்று மரம்மேல் ஏறுவதாகட்டும், சட்டென்று வெளிப்படும் அந்த பெண்மைத்தனமாகட்டும், கிளைமாக்சில் காட்டும் அந்த ஆக்ரோஷமாகட்டும்..விஷாலுக்கு இந்தமுறை அவார்டு கொடுக்காவிட்டால், இந்த படத்தை விஷால் இல்லாமல் ஒருமுறை பார்க்ககடவது என்று சாபம் கொடுப்பேன்.

ஆனால், பரபரப்போடு குத்தாட்டம் போட்டு தொடங்கும் திரைக்கதை, சாட்டில் மாட்டிக்கொண்ட பாரு போல தள்ளாடுகிறது. காரச்சட்னியை தலையில் ஊற்றிய பிதாமகன் போல வரும் ஆர்யாவும், முடிந்தவரை சிரிக்கவைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் கழுத, நமக்கு சிரிப்புத்தேன் வருவனான்னு அடம்பிடிக்குது. ஆனாலும், சிலநேரம், அவரும் அவர் குடும்பத்தார் பண்ணும் அலும்புகளும், “ரொம்ப ஓவராத்தான் போறாய்ங்களோ” என்று எண்ணவைக்கிறது. இந்த படத்துக்கு எதற்கு இரண்டு கதாநாயகிகள் என்றே தெரியவில்லை.

அதுவும், அது எப்படிதான் என்று தெரியவில்லை. நம்ம ஊரு நாயகிகளுக்கு கரெக்டா, திருடனைப் பார்த்தா மட்டும் காதல் உடனே வந்துவிடுகிறது. இதற்காகவே, நம்ம கோவாலு, சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு, திருடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

இசை, யுவன்சங்கர் ராஜாவாம். “டியா..டியா டோலு..” “ராசாத்தி” தவிர மற்ற பாடல்கள்..ம்..ஹீம்..என்ன ஆச்சு யுவன்..பேமண்ட் வரவில்லையா..காவல்துறையை இதற்கு மேல் எந்த படத்திலும் கேவலப்படுத்தமுடியாது. சின்ன பையன் கூட கேவலமா பேசுகிறான். எந்த ஊரில் என்று தெரியவில்லை. அது போல ஜமீன் கதாபத்திரம் எந்த ஊரில் இப்படி ஜோக்கராக இருப்பார் என்று தெரியவில்லை. ஆனாலும், ஊருக்குள் அவருக்கு அப்படி ஒரு மதிப்பாம். கஷ்டப்பட்டு நடித்த ஜி.எம் குமாரின் உழைப்பும், விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்போகிறது. அவர் கதாபாத்திரத்தின் மேல் உள்ள விளையாட்டுத்தனத்தாலேயே, அவர் இறக்கும்போது, ஒரு பரிதாபமும் வரவில்லை.

வசனம் எஸ்.ராமகிருஷ்ணன்..”அம்மா மாவு மாதிரி போகுதும்மா..லேடிஸ் பேண்டுக்கு எதுக்கு ஜிப்பு”, இது போன்ற வசனங்கள், இலக்கியத்தை பறைசாற்றுகின்றன்..இதுதான் இலக்கியம் என்றால் ஐ ஆம் ஆல்ரெடி இலக்கிவியாதி..ச்சீ..இலக்கியவாதி.. மற்றப்படி பீடி வலித்துக்கொண்டு வரும் அம்பிகா..ஏர்டெல்சிங்கர் புகழ் வாய்ஸ் எக்ஸ்பெர்ட் வைத்தியநாதன்(ஏன் சார்..இப்படி), இவர்களெல்லாம் கதாபத்திரங்களுக்கு எப்படி பொருந்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

இயக்கம் பாலா..புது இயக்குநராக இருக்கவேண்டுமென நினைக்கிறேன். இயக்குநருக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே திரையுலகில், சேது, பிதாமகன் நான் கடவுள் போன்ற இயல்பு மாறாத காவியங்களை எடுத்த இயக்குநர் “பாலா” என்று ஒருவர் இருக்கிறார். நீங்கள், தயவுசெய்து பேரை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், இது “பாலா” படம் என்று நினைத்து, நிறைய பேர் ஏமாறுவதற்கு வாய்ப்பு உண்டு..எங்கள் பாலா, இப்படி கதையே இல்லாமல் படம் எடுக்கமாட்டார். முடிந்தால் சேது, பிதாமகன் படங்களை பாருங்கள். இயல்பு, யதார்த்தம், கிராமத்து மனிதர்கள் என்றால் என்னவென்று தெரியும். உயிரை அறுத்துக்கொண்டு போகும் காதல், நட்பு என்னவென்று தெரியும்.ஆனாலும், சிலகாட்சிகளில் உங்களிடம் பாலா டச் தெரிகிறது. குறிப்பாக, ராஜபக்சே பற்றி வரும் காட்சிகளிலும், அந்த கிளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்களிலும்.

முடிவாக அவன் இவன் – அவன் மட்டுமே..அது, விஷால்..

2 comments:

Jackiesekar said...

Paraparappana... conversation recording between erode kadhir, Jackiesekar and cibi......



http://www.youtube.com/watch?v=jd59h6EklBc&feature=youtube_gdata_player

balaji said...

Nalla padhivu.

Post a Comment