Sunday 7 November, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார வாழ்த்துக்கள்

மழை வந்து இந்த வார தீபாவளியை கெடுத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். தீபாவளி கொண்டாடலாமா, வேண்டாமா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், இதுபோல திருவிழா காலங்களில்தான், மனம் நிறைய அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. செலவுகளை மீறி, அனைவரின் முகத்திலும் சந்தோசத்தை பார்க்க முடிகிறது. அந்த பட்டாசுகளை வெடிக்கும்போது அனைவரும் குழந்தைகளாக மாறிப்போகிறோம். அன்றைக்காவது கோயிலுக்கு சென்று நம் பக்தியை உறுதிப்படுத்துகின்றோம். அதனால், ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடுவது அவசியமே என்று கூறி வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு(ஆஹா..தீபாவளி பட்டிமன்றம் பார்த்த எபெக்டோ…). மறுபடியும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நானும் என் மனைவியும், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஒன்று கவனித்தேன்.. கோயிலில் கூட்டம் அதிகமானதால் பார்க் பண்ண இடம் கிடைக்கவில்லை. பக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பார்க்கிங் அனுமதித்தார்கள். டிராபிக்கை சரி பண்ணியது, அரபுநாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய அன்பர்.

இந்த வார நிகழ்ச்சி

பொதுவாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நான் விரும்பி பார்ப்பதில்லை, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தை தவிர. ஆனால் இந்த வருட தீபாவளி நிகழ்ச்சிகளில் இரண்டு என் கவனத்தை ஈர்த்தது. ஒன்று எப்படி பேட்டி இருக்ககூடாது என்பது, மற்றொன்று எப்படி பேட்டி இருக்கவேண்டும் என்பதற்கு. முதலாவது வகை சன்.டிவியில் ஒளிபரப்பான நடிகர் ரஜினிகாந்த் பேட்டி. மீடியாவின் ஹாட்கேக்கான ரஜினிகாந்த் உங்கள் எதிரில். அனைவரின் கவனமும் பேட்டிமீதுதான். அடி பின்னியிருக்கவேண்டாமா. இருப்பதிலேயே மோசமான பேட்டி காண்பவர் விஜயசாரதிதான் என்பேன். அவர் உட்கார்ந்து இருக்கும் தொனியை பார்த்தாலே சொல்லிவிடலாம். ஏதோ வாத்தியாருக்கு பயந்த மாணவன் போல, சீட்டின் நுனியில். மனிதருக்கு சுத்தமாக ஆளுமை இல்லை. எப்பொழுது பார்த்தாலும், சன்.டிவி தயாரித்த இந்த படம் பற்றிய அனுபவங்கள் என்ற ஒரே உப்புமா கேள்விதான். அதற்கு ஒரு ரஜினி ரசிகரை வைத்து கேட்டிருந்தாலே ஒழுங்காக கேட்டிருப்பார். கடைசியில் அமெச்சூர்தனமாக ஒரு முத்தம் வேறு. ஒரு கேள்விக்காவது ரஜினி முழுவதுமாக பதிலளித்தாரா என்று கேட்டால்..ம்..ஹூம்..கேட்டால், ஸ்டைல் என்பீர்கள்.

இரண்டாவது வகை, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபிவித் அனுவில் கமல் பேட்டி. இது பேட்டி..அனைத்து கேள்விகளும் அவரின் பால்ய காலத்தின் நினைவுகளுக்கு இழுத்து சென்றது. நம்மையும்தான். அனைத்து கேள்விகளும், அருமை. அனுவின் கேள்விகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று தெரியும். எதிரில் உள்ளவர் மறந்து போன அவருடைய வாழ்க்கை நிகழ்வை அழகாக ஞாபகப்படுத்தி, அவருடைய வாயிலிருந்தே அனைத்தையும் சொல்லவைப்பார். ஏதோ கமலோடே ஒரு மணிநேரம் பயணம் சென்றது போன்ற உணர்வு.

இந்த வார எதிர்பார்ப்பு

மைனா படம். தீபாவளி வந்த படங்களில் நன்றாக இருப்பதாக கேள்விபட்டேன். இதுபோன்ற படங்கள் எடுக்கும்போது பருத்திவீரன் சாயல் இல்லாமல் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால், பருத்தி வீரன் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு. ஆனால் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் ஓவராக பேசிய அளவுக்கு படம் இல்லை என்று கேள்விப்பட்டேன். டைரக்டர் சார், கண்டிப்பாக இது நல்ல படம். மிகவும் கஷடப்பட்டுள்ளீர்கள், தெரிகிறது. படத்தைப் பற்றி பார்த்தவர்கள் பேசட்டுமே…

இந்த வார பாடல்

சில முத்தான பாடல்களை கேட்கும்போது, ஏண்டா இந்த படங்களில் வந்தது என்று எண்ணத்தோன்றும்., அப்படி சமீபத்தில் நான் கேட்டது, “அன்பு” என்ற படத்தில் வந்த “தவமின்றி கிடைத்த வரமே” என்ற வித்யாசாகரின் இந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=Yn9rKYZWgyA

பாடலை எவ்வளவு கேவலமாக படம்பிடிக்கவேண்டுமோ, அவ்வளவு கேவலமாக படம்பிடித்திருக்கிறார்கள். பாடலை மட்டும் கேட்பது நலம்

அடுத்தது, இளையராஜா மற்றும் சுவர்ணலதாவின் அட்டகாசமான இந்தப் பாடல். பாடல் ஆரம்பிக்கும்போது வரும் அந்த கிதாரின்(???) வாசிப்புக்கு நீங்கள் மயங்காவிடில், பக்கத்தில் உள்ள மருத்துவரை தைரியமாக அணுகலாம். ஆனால் படமாக்கிய விதம்??? குடும்பத்தோடு படம்பார்க்க நேர்ந்தால், அடிக்கடி பாக்யராஜ் போல நாணயங்களை கீழே போடவேண்டியிருக்கும்.

http://www.youtube.com/watch?v=iBpFOpWVf2s&feature=related

இந்த வார பதிவு

நமக்குதான் கவுஜ எழுத வரவில்லை, அட்லீஸ்ட் எழுதுபவர்களையாவது, உற்சாகப்படுத்துவோமே. சமீபத்தில் படித்த பாலாஜி சரவணனின் இந்த கவுஜ, சாரி, கவிதை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் முடிவில் வரும் அந்த மூன்று வரிகள்

http://balajisaravana.blogspot.com/2010/11/blog-post.html

இந்த வார படம்

போனமுறை ஒரு ஆங்கில படத்தில் நடித்தவரின் பெயரை தவறாக சொல்லி நிறைய பல்புகள் வாங்கியிருந்தேன். ஆனாலும் இந்த முறை முடிந்தவரை சரியாக சொல்லியிருக்கிறேன்.

சமீபத்தில் பார்த்த ஒரு படம் "பெல்காம் 123" - (Pelham 123). டிரிவால்டோ, டென்ஷல் வாஷிங்க்டன் நடித்த இந்த படம் கண்டிப்பாக உங்களை கவரும்.

இந்த வார பொன்மொழி

“ஒன்று தூங்கு..இல்லை தூங்கவிடு….” – மேன்சனில் கேட்டது


3 comments:

'பரிவை' சே.குமார் said...

Mixer Nalla irukku.

//“ஒன்று தூங்கு..இல்லை தூங்கவிடு….” – மேன்சனில் கேட்டது//

Correctthaney...

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கிங் மேட்டர் சூப்பர்...

எஸ்.கே said...

வழக்கம்போல் தொகுப்பு நன்றாக உள்ளது!

Post a Comment