விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா என்று ஆரம்பித்தால், என்னை அடிக்கவிரட்டுவீர்கள் என்று தெரியும்..ஏனென்றால், விமர்சனத்தையே விமர்சனம் பண்ணுவதற்கு நான் நீதிபதியும் இல்லை, இப்படித்தான் விமர்சனம் செய்யவேண்டும் என்று சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால் இப்படி இருந்தால் நலம்(கமல் மாதிரி குழப்புறேனா…) என்பதை சொல்லவே, இந்த விமர்சனங்களின் விமர்சனப் பதிவு.(குழம்புறீங்களா..இதுக்கு பேர்தான் சைடு நவீனத்துவம்..மார்க்கெட்டுல புதுசா வந்துருக்கு).
ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். எனக்கு நன்றாக இருக்கும் படம், இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதை எப்படி விமர்சிக்கிறோம் என்ற முறை உள்ளது. அதிலும் ஒரு நியாயம் வேண்டும் என்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு மூன்றாந்தர பிட்டு படத்தை விமர்சனம் செய்யும்போது, “சரியான மொக்கைடா”(அதெல்லாம் எவனும் சொல்ல மாட்டாய்ங்க) என்று சொல்லும்போது, அந்த படத்திற்கு அது தேவைதான். ஏனென்றால், அந்த படத்தில் எதுவும் சரியாய் இருக்கப்போவதில்லை.(தேவையில்லாத மனக்கிளர்ச்சியை தூண்டிவிடுவதைத் தவிர).
ஆனால் மயக்கம் என்ன என்ற படத்தைப் பற்றி சில விமர்சனங்களைப் படித்தபோது, கோபம் கோபமாக வந்தது. நம் பதிவுலகத்தில் ஒரு வழக்கம் உள்ளது. ஏதாவது ஒரு படத்தை கலாய்க்கவேண்டுமானல் போச்சு, அந்த படத்தைப் பற்றி ஒன்றும் தெரியவேண்டியதில்லை..”மரண மொக்கைடா..”, “தியேட்டருல எல்லாரும் ஓடியே போய்ட்டாய்ங்கடா..”வயிறு வலிடா..” “கொடுமைடா..” என்று நான்கு கேட்சியாக கேப்சன்களை போட்டால் போதும்…அவ்வளவுதான், நானும் சிறந்த விமர்சகர்..
இன்னொரு டைப்பான விமர்சனம்..பாராட்டுறேன்னா திட்டுறரேன்னா கூடத்தெரியக்கூடாது..வார்த்தைகள் புரியக்கூடாது…வைட் ஆங்கிள் சரியில்லை..கேமிராவுல கொஞ்சம் அழுக்கு இருந்துச்சு., ஜீம் லென்ஸ் கோணிக்கிட்டு இருந்துச்சு என்று கொஞ்சம் டெக்னிக்கலாக அடிச்சுவிட்டால் போதும், “ஆஹா..என்னமா எழுதுறான்யா..” என்று ஒரே பாராட்டு மழைதான். பதிவின் முடிவில் கண்டிப்பாக “இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு காவியம் கிடைத்திருக்கும்..” என்று சேர்த்துவிட்டால் போதும், நீங்கள் தான் சூப்பர் விமர்சகர்..
அப்புறம் முக்கியமானதை மறந்துவிடக்கூடாது, படத்தலைப்பினை வைத்துதான், கேட்சியாக முடிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, அரை மயக்கம் – குறை மயக்கம், பாலை – தொல்லை, ஆறாம் அறிவே – அறிவே இல்லை, ரௌத்திரம் – தரித்திரம்..இப்படி..இதெல்லாம் இல்லாமல் ஒரு விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
சரி, மயக்கம் என்ன படத்திற்கு வருவோம். சில விமர்சனங்கள் சொல்லுவது போல் படம் மரணமொக்கையா, முதலில் மொக்கை என்பதற்கே என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சரி, மொக்கை என்பதை,வேஸ்டு என்றே எடுத்துக்கொள்ளுவோம்..ஒரு வாதத்துக்காக மரணமொக்கை என்றால் எல்லாம் வேஸ்டு என்றே கொள்வோம்..மயக்கம் என்ன படம் எல்லாத்துறையிலும் வேஸ்டா..அப்படி என்றால் படத்தின் பாடல்கள் ஹிட் என்பது தவறா..படத்தின் ஒளிப்பதிவு சரியில்லையா. யாருடைய நடிப்பு சரியில்லை…
சரி, நாயகன் சைக்கோவாகத்தான் இருக்கிறான் என்றால், ஏன் இருக்ககூடாது….எல்லோரிடம் ஒரு சைக்கோத்தனம் இல்லையா..ஏன் ஹீரோ, எல்லாரையும் காப்பாற்றும் சூப்பர்மேனாகத்தான் இருக்கவேண்டுமா..எனக்கு புரியவில்லை…
ஒரு நண்பன் கேட்ட கேள்விதான் எனக்கு கடுப்பை கிளப்பியது..”என்னடா படத்தை இருட்டுலயே எடுத்துருக்காய்ங்க” இதற்கு நான் என்ன பதில் சொல்வது..காட்டுக்குள்ள நாலு ட்யூப் லைட்டு போட்டா எடுக்கமுடியும். படத்துல கேமிரா சூப்பருல்ல என்று சொன்னால், “நானும் படம் முழுக்க பார்த்தேன், கேமிரா எங்கேயுமே தெரியலையேடா..” என்று சொல்லும் அபத்தம் போல் இருக்கிறது.
அதற்காக படத்தின் குறைகளை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக குறைகளை விமர்சிக்கவேண்டும். அதுவே முறையான நடுநிலையான விமர்சனம். ஆனால் நியாயமில்லாத காரணங்களை சொல்லிவிட்டு, கடைசியாக “மரணமொக்கை” என்று சொல்லுவது, அந்த படைப்பையும், படைப்பாளியின் உழைப்பையும் அவமானப்படுத்துதல் போல் அல்லவா..
ஏதோ மனதில் உள்ளதை ஆதங்கமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். யாருடைய மனதையும், புண்படுத்தியிருந்தால், உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் தானே மனிதன்…என்ன சொல்லுறீங்க…